போதை ஒழிப்பை தீவிரப்படுத்த டி.ஜி.பி.,க்கள் கூட்டத்தில் முடிவு

சென்னை:தென்மாநில டி.ஜி.பி.,க்கள் கூட்டத்தில், போதைப்பொருள், ஆயுதங்கள் கடத்தல், நக்சல் ஒழிப்பு உள்ளிட்ட குற்றங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பது என, முடிவு செய்யப்பட்டு உள்ளது.

தமிழகம், கேரளா, தெலுங்கானா, ஆந்திரா மற்றும் புதுச்சேரி, அந்தமான், நிக்கோபார், லட்சத்தீவு யூனியன் பிரதேசங்கள் உள்ளடக்கிய தென்மாநில டி.ஜி.பி.,க்கள் மாநாடு, கடந்த ஆண்டு சென்னையில் நடந்தது. அதைத் தொடர்ந்து, இரு தினங்களுக்கு முன், ஆந்திர மாநிலம், திருப்பதியில், பயங்கரவாதம் மற்றும் நக்சல் ஒழிப்பு குறித்து காலாண்டு கூட்டம் நடத்தப்பட்டது.

தமிழக காவல் துறை ஒருங்கிணைப்பில், மண்டல அளவிலான கூட்டம், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, நேற்று நடத்தப்பட்டது.

இதில், ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள், செம்மரம் கடத்தல், ரவுடிகள் மற்றும் நக்சல் ஒழிப்பு தொடர்பான உளவுத் தகவல்கள் பரிமாறப்பட்டன.

குற்றவாளிகளை கைது செய்வது, பிடிவாரன்ட் நிறைவேற்றுவது, நீதி விசாரணை எல்லைகள், நெடுஞ்சாலை கண்காணிப்பை பலப்படுத்துவது தொடர்பாக, உளவு தகவல்களை பரிமாறிக் கொள்ள ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

நக்சல் ஒழிப்பு, பயங்கரவாதிகளுக்கு எதிராக தொடர் நடவடிக்கை எடுப்பது, போதைப்பொருள் கடத்தலை முற்றிலுமாக ஒழிப்பது என்றும், கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement