'ஓடாத வண்டியில் பயணம் செய்ய தி.மு.க., தயாராக இல்லை' எதிர்க்கட்சி தலைவர் சிவா காட்டம்

புதுச்சேரி : ஓடாத வண்டியில் ஏறி பயணம் செய்ய தி.மு.க., தயாராக இல்லை என, மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ., பேசினார்.

தி.மு.க., மாநில அவசர செயற்குழு கூட்டத்தில், அவர், பேசியதாவது:

புதுச்சேரி மாநிலம் வளர்ச்சி, படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, தொழில் புரட்சி, சுற்றுலாவை மீட்டெடுக்க வேண்டும் என்று தி.மு.க., தொடர்ந்து போராடி வருகிறது. புதுச்சேரியில் தி.மு.க., ஆட்சி இருக்கும்போது தான் தொழில் வளர்ச்சி, கல்வி வளர்ச்சி ஏற்படுத்தப்பட்டது.

இன்று இரட்டை இன்ஜின் பூட்டிய அரசால் எந்த ஒரு புதிய திட்டத்தையும் கொண்டு வர முடியமால் நிர்வாகத்தில் இரு துருவங்களாக செயல்படுகின்றனர். பெஸ்ட் புதுச்சேரி ஆக்குவோம் என்றார் நிர்மலா சீத்தாராமன். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தருவோம் என்றார் உள்துறை அமைச்சர் அமித்ஷா. ஆனால் எதுவும் நடக்கவில்லை.

கூட்டுறவு சர்க்கரை ஆலை, பஞ்சாலைகளில் பணிபுரிந்த 20 ஆயிரம் தொழிலாளர்கள் இன்று தெருவில் நிற்கின்றனர். இந்த மில்கள் திறந்திருந்தால் அதில் நடந்த ஊழல்கள் வெளிச்சத்துக்கு வந்துவிடும் என்பதால் மில்களை விற்று வருகிறார்கள். அந்த மில்களில் இருந்த கோப்புகள் மாயமாகிவிட்டன.

வரும் 2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் அனுமதியோடு புதுச்சேரியில் தி.மு.க., கூட்டணியில் 20 தொகுதிகளை கேட்டு பெறுவோம். தனித்து என்றால் 30 தொகுதியிலும் போட்டியிட்டு புதுச்சேரியில் மீண்டும் திராவிட மாடல் ஆட்சியை அமைப்போம்.

இனியும் ஓடாத வண்டியில் ஏறி பயணம் செய்ய தி.மு.க., தயாராக இல்லை. தற்போதுள்ள 6 தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் சிறப்பாக மக்கள் பணியாற்றுகின்றனர். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் மக்களுக்கு சேவை செய்து வருவதால் நிச்சயம் தி.மு.க., வெற்றிபெறும்' என்றார்.

Advertisement