'ட்ரோன்' சர்வே, சொத்து வரிக்கு அபராதம் நிறுத்தம் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு அறிவிப்பு

''கட்டடங்களை மறு அளவீடு செய்யும், 'ட்ரோன் சர்வே' மற்றும் தாமதமாக செலுத்தப்படும் சொத்து வரிக்கு 1 சதவீதம் அபராதம் விதிப்பது நிறுத்தப்படும். இதுவரை, ட்ரோன் சர்வே வாயிலாக எடுக்கப்பட்ட கணக்கீடும் நிறுத்தி வைக்கப்படும்,'' என, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு தெரிவித்தார்.
தமிழக மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட எட்டு மாவட்டங்களில், உள்ளாட்சி அமைப்புகளில் நடந்து வரும் பணிகள் மற்றும் அறிவிக்கப்பட்ட திட்டங்களில் உள்ள தேக்க நிலை தொடர்பான ஆய்வு கூட்டம் கோவையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு பின், அமைச்சர் நேரு அளித்த பேட்டி:
ட்ரோன் சர்வே முறையை முதல்வர் ஸ்டாலின் நிறுத்தச் சொல்லியிருக்கிறார். குறிப்பிட்ட காலத்துக்கு முன், சொத்து வரி செலுத்தினால் ஊக்கத்தொகை வழங்குகிறோம்; குறிப்பிட்ட காலத்துக்கு பின் செலுத்தினால் அபராதம் விதிக்கிறோம். இதையும் முதல்வர் நிறுத்தச் சொல்லியிருக்கிறார்.
இவை உடனடியாக அமலுக்கு வரும். ஏற்கனவே, ட்ரோன் சர்வே எடுக்கப்பட்டு, சொத்து வரியை உயர்த்தியிருந்தாலும் நிறுத்தி வைக்கப்படும். 6 சதவீத வரி உயர்வு மட்டும் அமலில் இருக்கும்.
மாநகராட்சியோடு, ஊராட்சிகளை இணைக்கக்கூடாது என நினைத்தால், கலெக்டரிடம் மனு கொடுத்தால், மறு ஆய்வு செய்வர்.
மாநகராட்சி பகுதியில் வசிப்பவர்களுக்கு அனைத்து வசதிகளும் கிடைக்கின்றன; அருகாமையில் உள்ளவர்களுக்கு வசதி கிடைக்காமல் இருப்பதால் இணைக்க நினைக்கிறோம்.
ஆட்சேபனை தெரிவித்தால், என்ன செய்வதென முதல்வர் முடிவெடுப்பார். கோவை, மதுரை மாநகராட்சிகளில் குப்பையில் மின்சாரம் தயாரிக்கும் தொழிற்சாலையை துவங்க இருக்கிறோம்; அதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு இருக்கிறது. குப்பை பிரச்னைக்கு விரைவில் தீர்வு கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
'தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் கோவையில் நடத்திய விழாவில், ஐந்து திட்டச்சாலைகள் அமைக்கும் அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். இதுவரை ஒரு திட்டச்சாலைக்கு கூட நிதி ஒதுக்கி, பணி செய்யவில்லை' என, நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு, ''இல்ல... இல்ல... அதெல்லாம் இல்ல... '' என, பதறிய அமைச்சர் நேரு, அதிகாரிகளை திரும்பிப் பார்த்தார். ''முதல்வர் அறிவித்த திட்டம் என்கிறார்; என்னாச்சு என பாருங்கள்,'' என, உத்தரவிட்டார். அப்போது, நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலர் கார்த்திகேயன், ''திட்டச்சாலைகள் என்பது உள்ளூர் திட்ட குழும நிதியை பெற்று, நிலம் கையகப்படுத்தி, சாலை போட வேண்டும். அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன,'' என்றார். அதன்பின், ''நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் சார்,'' என்றார் அமைச்சர் நேரு.
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பற்றிய கேள்விக்கு, அமைச்சர் நேரு, ''எங்கள் தலைவர் பற்றியோ, எங்கள் ஆட்சி பற்றியோ அண்ணாமலை எப்போது நல்லவிதமாக பேசி இருக்கிறார். எப்போதும் அவர் மோசமாகவே பேசுகிறார். தகுதியை மீறி, கீழே இறங்குகிறார். அது, அவருக்கு அழகல்ல. ஆட்சிக்கு நல்லது சொன்னதில்லை; பாராட்டும் தெரிவிப்பதில்லை. ஆனால், மக்கள் எங்களுடன் இருக்கின்றனர். வரும் தேர்தலிலும் முதல்வர் வெற்றி பெறுவார்; மீண்டும் ஸ்டாலின் முதல்வராவார்,'' என்றார்.
- நமது நிருபர் -

மேலும்
-
'அழகாக இருக்கிறீர்கள்' என்று மெசேஜ் அனுப்பினாலே குற்றம்: மும்பை நீதிமன்றம்
-
இந்தியா-பாக்., மோதல்... 'வின்னர்' யார்: கங்குலி, அப்ரிதி கணிப்பு எப்படி
-
பெங்களூருவை வீழ்த்தியது மும்பை: கடைசி ஓவரில் 'திரில்' வெற்றி
-
சரத்கமல், போபண்ணா நீக்கம் * மத்திய விளையாட்டு அமைச்சகம் 'ஷாக்'
-
இந்தியா உலக சாதனை * ஆசிய கோப்பை வில்வித்தையில்...
-
கோலிக்கு கும்ளே 'அட்வைஸ்'