வருவாய்த் துறையினர் தொடர் போராட்டம்

ராஜபாளையம் : மாவட்டம் முழுவதும் வருவாய்த்துறையினர் தொடர் போராட்டத்தால் வருவாய் சான்றிதழ், ஜாதி சான்றிதழ் உள்ளிட்ட அடிப்படை சான்றுகளை பெற முடியாமல் மாணவர்களும் ,பயிர் அடங்கல் பெற முடியாமல் அறுவடை நெல்லை கொள்முதல் நிலையங்களில் கொண்டு செல்ல முடியாமல் விவசாயிகளும் தவித்து வருகின்றனர்.

சாத்துார் அருகே இ.குமாரலிங்காபுரத்தில் கனிம வளக்கொள்ளை தொடர்பாக தாசில்தார் உட்பட வருவாய்த்துறை அதிகாரிகள் உள்ளிட்ட ஏழு பேர் மீது பிப். 12ல் கலெக்டர் ஜெயசீலன் சஸ்பெண்ட் உத்தரவு பிறப்பித்தார். இதை கண்டித்து வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் பிப்.13 முதல் பணிகளை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே மாவட்டத்தில் வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு என்ற பெயரில் வி.ஏ.ஓ.,க்கள் உட்பட அனைத்து சங்கங்களும் இதில் கலந்து கொண்டுள்ளன. இதனால் தேர்வுகளை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கான சாதி, வருமான, இருப்பிட சான்றிதழ்களும் பட்டா மாறுதல், நில அளவை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை சேவைகளும் கிடைக்காமல் முடங்கி உள்ளது.

தற்போது ஜே.இ.இ., உள்ளிட்ட தேர்வுகளுக்கு கடைசி தேதி நெருங்கி உள்ளதால் மாணவர்களின் கல்வி வாய்ப்பும், நெல் கொள்முதல் நிலையங்களுக்கு 10:1 அடங்கல் வழங்குவதில் அலுவலர்கள் இல்லாமல் விவசாயிகள் அறுவடை நெல் தேக்கமும் என பல்வேறு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அரசின் பல்வேறு பணிகளுக்கு ஆதாரமாக உள்ள வருவாய் துறையினரின் புறக்கணிப்பால் பாதிக்கப்பட்டு வரும் பொது மக்கள் சிரமத்தை கருதி பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Advertisement