சிவகாசிக்கு போதிய டவுன் பஸ்கள் இல்லை ஸ்ரீவி.,யில் தவிக்கும் கல்லுாரி மாணவர்கள்

ஸ்ரீவில்லிபுத்துார் : சிவகாசிக்கு போதிய அளவிற்கு டவுன் பஸ்கள் இயக்கப்படாததால் காலை நேரங்களில் கல்லுாரிக்கு செல்லும் ஸ்ரீவில்லிபுத்துார் மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். கூடுதல் டவுன் பஸ்கள் இயக்க வேண்டுமென எதிர்பார்க்கின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்துார், மம்சாபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பல ஆயிரம் மாணவர்கள் சிவகாசியில் உள்ள அரசு, தனியார் கல்லுாரிகளில் படித்து வருகின்றனர்.

கல்லுாரிகளின் சார்பில் பஸ்கள் இயக்கப்பட்டாலும் ஏழை மாணவர்கள் அரசு டவுன் பஸ்களில் தான் அதிகமாக பயணித்து வருகின்றனர்.

ஆனால், இவர்கள் சிரமமின்றி சிவகாசி சென்று வருவதற்கு போதிய டவுன் பஸ்கள் இல்லாததால் காலை 7:30 மணி முதல் 9:30 மணி வரை மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்துார் பஸ் ஸ்டாண்டுக்குள் பஸ்கள் வரும்போது மாணவர்களுக்கு இணையாக மாணவிகளும் ஓடிப் பிடித்து பஸ்களில் இடம் பிடிக்கும் நிலை காணப்படுகிறது. இதனால் விபத்து அபாயம் ஏற்பட்டு வருகிறது.

எனவே, ஸ்ரீவில்லிபுத்துாரிலிருந்து காலை 7:30 மணியிலிருந்து 9:30 மணி வரை கூடுதல் டவுன் பஸ்கள் இயக்க மாவட்ட நிர்வாகமும், அரசு போக்குவரத்துக் கழகமும் முன்வர வேண்டுமென கல்லூரி மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement