டெண்டர் பங்கீட்டில் அடிதடி டவுன் பஞ்., அலுவலகம் சூறை
நாகர்கோவில்:டெண்டர்களை பங்கிட்டுக் கொள்வது தொடர்பாக கவுன்சிலர்கள், கான்ட்ராக்டர்கள் இடையே ஏற்பட்ட மோதலில், பேரூராட்சி அலுவலக பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இது தொடர்பாக, 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், அருமனை அருகே இடைக்கோடு பேரூராட்சியில், 47 கான்ட்ராக்டர்கள் பதிவு செய்துள்ளனர். இரு நாட்களுக்கு முன், பேரூராட்சியில் சில பணிகளுக்கான டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டு, பெட்டிகள் வைக்கப்பட்டன.
ஏற்கனவே டெண்டர் எடுத்தவர்கள், அவர்களின் மனைவி பெயரில் மீண்டும் பணி கேட்டு அலுவலகத்தில் முகாமிட்டனர். இதனால், இதுவரை வேலை கிடைக்காத கான்ட்ராக்டர்களுக்கும், அவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. கவுன்சிலர்களும் இரு பிரிவாக பிரிந்து, பரஸ்பரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்த வாக்குவாதம் முற்றி மோதலானது. அலுவலக டேபிள், சேர்கள் உடைக்கப்பட்டு, பைல்கள் சேதப்படுத்தப்பட்டன. இதனால் டெண்டர் ஒத்தி வைக்கப்பட்டது.
பேரூராட்சி தலைவர் உமாதேவி புகாரில், கான்ட்ராக்டர்கள் வினு, கிறிஸ்துராஜ், விஜயகுமார், கவுன்சிலர்கள் ராஜா ஸ்டாலின், சுரேஷ், சாஜிகுமார் உள்ளிட்ட 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.