பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த பண்ருட்டியில் போராட்ட ஆயத்த மாநாடு அரசு பணியாளர் சங்கம் அறிவிப்பு

விருதுநகர்,:''பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடலுார் மாவட்டம் பண்ருட்டியில் பிப்., 23 ல் மாநில போராட்ட ஆயத்த மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது,'' என, விருதுநகரில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது: பழைய ஓய்வூதியத்திட்டத்தை பல மாநில அரசுகள் நடைமுறைப்படுத்தி வருகின்றன. மத்திய அரசு ஒரு ஓய்வூதியத்திட்டத்தை அறிவித்து விட்டது. தமிழக அரசு முடிவெடுக்காமல் கமிட்டியை போட்டுள்ளது. அரசு பணியாளர் சங்கம் இக்கமிட்டியை வரவேற்கவில்லை. பழைய ஓய்வூதியத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை அரசு ஏற்க வேண்டும்.

ஊராட்சி துாய்மை பணியாளர்கள், ஓ.எச்.டி., ஆப்பரேட்டர்கள், தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறுவோருக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். சிலருக்கு ரூ.2 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. அவர்களுக்கு அகவிலைப்படி வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.10 ஆயிரம் அறிவிக்க வேண்டும்.

அரசு துறைகளில் நிரந்தர பணியிடங்கள் குறைந்து வருகிறது. தொகுப்பூதியம், மதிப்பூதியம், அவுட்சோர்சிங், தினக்கூலி என்ற வகையில் பணி நியமனங்களை நிறுத்தி வைத்து, நிரந்தர சம்பள விகிதம், பணி வழங்க வேண்டும்.

ரேஷன் திட்டத்தை வருவாய், கூட்டுறவு, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் தொழிலாளர் நலத்துறையினர் நிர்வகித்து வருகின்றனர். இதனால் ரேஷன் பணியாளர்களுக்கு பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன. ரேஷனை ஒரே துறையின் கீழ் கொண்டு வர வேண்டும். சரியான எடையில் பொட்டலங்களாக பொருட்களை அரசே ரேஷன் கடைகளுக்கு வழங்க வேண்டும்.

பணி நியமனம், இடமாறுதல், பதவி உயர்வு ஆகியவற்றில் வெளிப்படையான செயல்முறை வேண்டும். சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை சேர்த்து பணப்பலன்கள் வழங்கப்பட வேண்டும். இதுபோன்ற 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பண்ரூட்டியில் போராட்ட ஆயத்த மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் அடுத்தகட்ட போராட்டம் அறிவிக்கப்படும் என்றார்.

Advertisement