கைத்தறியில் ரக ஒதுக்கீடு அமல் செய்யாததால் தமிழகத்தில் ரூ.100 கோடி பட்டு ஜவுளி தேக்கம்

பரமக்குடி:தமிழகம் முழுவதும் கைத்தறி ஜவுளிகளுக்கு ரக ஒதுக்கீடு அமல் செய்யப்படாத நிலையில் பட்டு ஜவுளிகள் விற்பனையின்றி ரூ.100 கோடிக்கும் மேல் தேங்கியுள்ளதாக நெசவாளர்கள் கவலை தெரிவித்தனர்.

கைத்தறி துறையில் தொழில் பாதுகாப்பு, வளர்ச்சி மற்றும் திட்டமிடல், முறைப்படுத்துதல், மேற்பார்வையிடுதல் போன்றவற்றை செயல்படுத்த வேண்டும். விசைத்தறியில் அனைத்து ரகங்களையும் புகுத்தாமல் இருக்க அனைத்து வகை கைத்தறிக்கும் 11 ரக ஒதுக்கீடு அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டம் 1985ல் செயல்படுத்தப்பட்டு சென்னையை தலைமையிடமாகக் கொண்டு கைத்தறி அமலாக்கப் பிரிவு செயல்படுகிறது.

மேலும் சேலம், திருச்செங்கோடு, ஈரோடு, திருப்பூர் மற்றும் மதுரை ஆகிய 5 இடங்களில் மாவட்டம் வாரியாக உதவி இயக்குனர் அலுவலகங்கள் இருக்கிறது.

கைத்தறி பட்டு சேலையின் விலை ரூ.5000 துவங்கி 50 ஆயிரத்திற்கும் மேல் உள்ளது. ஆனால் இதே ரகத்தை விசைத்தறியில் நெய்யும் போது ரூ.1000 முதல் விற்பனை செய்ய முடிகிறது. தொடர்ந்து அமலாக்கப் பிரிவு சட்டத்தில் கைத்தறியை விசைத்தறியில் புகுத்துவோருக்கு 6 மாத சிறை தண்டனை அல்லது ஒரு விசைத்தறிக்கு ரூ.5000 அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனை விதிக்க சட்டம் உள்ளது.

இதுகுறித்து பாரதிய மஸ்தூர் சங்க மாநில பொருளாளர் காசிவிஸ்வநாதன் கூறியதாவது:

பட்டுக்கு தீட்டு கிடையாது என்ற அடிப்படையில் அனைத்து திருமணம் உள்ளிட்ட விசேஷங்களுக்கும் பட்டு சேலை உடுத்துவது வழக்கம். ஆனால் ரக ஒதுக்கீடு அமலில் இல்லாத நிலையில் விலை குறைவான பட்டு, பருத்தி, பம்பர் சேலை என விசைத்தறி சேலைகளை வாங்கும் மோகம் அதிகரித்துள்ளது.

இதனால் திருபுவனம், காஞ்சிபுரம், பரமக்குடி பட்டு நெசவு நெய்யும் பகுதிகளில் ரூ.100 கோடிக்கும் மேல் பட்டு ஜவுளிகள் தேங்கி இருக்கிறது. இதனால் பாரம்பரிய நெசவுத் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக இருக்கிறது. ஆகவே அரசு சட்டங்களை கடுமைப்படுத்தி அதிகாரிகள் கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Advertisement