சமூக பணி உறுப்பினர் நியமனம் விண்ணப்பங்கள் வரவேற்பு

சென்னை:'இளைஞர் நீதி குழுமத்தில், சமூகப்பணி உறுப்பினர்கள் நியமனத்திற்கு விண்ணப்பிக்கலாம்' என, சமூக நலத்துறை அறிவித்துள்ளது.

அதன் அறிக்கை:

அரியலுார், கடலுார், ஈரோடு, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருவாரூர், தஞ்சாவூர், தேனி, வேலுார், விழுப்புரம், விருதுநகர் மாவட்டங்களில், இளைஞர் நீதி குழுமத்தின் சமூகப்பணி உறுப்பினர்கள் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

குழுமத்திற்கு ஒரு பெண் உட்பட இரண்டு சமூகப் பணி உறுப்பினர்கள், அரசு மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர். இது, அரசு பணி அல்ல.

விண்ணப்பதாரர் குழந்தைகள் உடல் நலம், கல்வி அல்லது குழந்தைகள் நலப்பணிகளில், குறைந்தது ஏழு ஆண்டுகள் ஈடுபாடு கொண்டவராக இருத்தல் வேண்டும். அல்லது குழந்தை உளவியல், மனநல மருத்துவம், சமூகவியல் அல்லது சட்டம் ஆகியவற்றில், ஏதேனும் பட்டம் பெற்று தொழில் புரிபவராக இருத்தல் வேண்டும்.

வயது, 35 வயதுக்கு குறையாமல், 65 வயது பூர்த்தியாகாமல் இருக்க வேண்டும். இதற்கான விண்ணப்பத்தை, அந்தந்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் பெறலாம். அல்லது, https://dsdcpimms.tn.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.

பூர்த்தி செய்த விண்ணப்பத்தை, குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை இயக்குநர், 300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை-600 010 என்ற முகவரிக்கு, மார்ச் 7ம் தேதி, மாலை 5:00 மணிக்குள் சேரும் படி அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement