வெடிகுண்டு மிரட்டல்: ரோமுக்கு திருப்பி விடப்பட்ட நியூயார்க் -டில்லி விமானம்

புதுடில்லி: அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நியூயார்க் -டில்லி (ஏஏ 292) விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததைத் தொடர்ந்து ரோமுக்கு திருப்பி விடப்பட்டது.

நியூயார்க் மற்றும் புதுடில்லி இடையே தினசரி விமானத்தை அமெரிக்கன் ஏர்லைன்ஸ் இயக்கி வருகிறது. இந்நிலையில் 285 பயணிகளை ஏற்றிச் சென்ற போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம் நேற்று (பிப்ரவரி 22) இரவு 8.14 மணிக்கு நியூயார்க்கில் இருந்து புறப்பட்டு காஸ்பியன் கடலுக்கு மேலே சென்று ஐரோப்பா நோக்கித் திரும்பியது..

இருப்பினும், பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக விமானிகள் நடுவானில் யு-டர்ன் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, இப்போது விமானம் திட்டமிடப்படாத ஸ்டாப்பிற்காக இத்தாலியின் ரோம் நகருக்கு சென்றது.

அமெரிக்க விமானக் குழுவினர் மற்றும் விமானிகள் வந்து சேர்ந்தவுடன், விமானம் ரோமில் இருந்து பின்னர் பறக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் அறிக்கை:

விமான நிறுவனம், நியூயார்க்கிலிருந்து டில்லிக்கு இயக்கப்படும் ஏஏ 292, விமானத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கலாம் என்ற சந்தேகம் காரணமாக ரோமுக்கு திருப்பி விடப்பட்டது. உள்ளூர் அதிகாரிகளுடன் நாங்கள் நெருக்கமாக பணியாற்றி வருகிறோம், மேலும் நிலைமை சரியானதும் அடுத்த தகவல் வழங்குவோம். எங்கள் பயணிகளின் பொறுமை மற்றும் ஒத்துழைப்பை நாங்கள் பாராட்டுகிறோம்.

இவ்வாறு அமெரிக்கன் ஏர்லைன்ஸ் அறிக்கையில் கூறியுள்ளது.

Advertisement