ஒரே நேரத்தில் 267 டிரோன்கள் மூலம் தாக்குதல்; உக்ரைனை ஸ்தம்பிக்க வைத்த ரஷ்யா

2

கீவ்: ஒரே நேரத்தில் உக்ரைன் மீது 267 டிரோன்கள் மூலம் தாக்குதலில் ரஷ்யா ஈடுபட்டது. இந்த சம்பவத்திற்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.


கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான போர் 3ம் ஆண்டை நெருங்கியுள்ளது.


அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்டு டிரம்ப், ரஷ்ய அதிபர் புடினுடன் பேச்சு நடத்தி, போரை முடிவுக்கு கொண்டு வரவுள்ளதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார். ஆனால், இரு நாடுகளிடையே தொடர்ந்து தாக்குதல்கள் நீடித்து வருகின்றன.


இந்த நிலையில், ஒரே சமயத்தில் 267 டிரோன் தாக்குதலில் ரஷ்யா ஈடுபட்டதாக உக்ரைன் விமானப் படையின் செய்தித் தொடர்பாளர் யுரி இக்னட் தெரிவித்துள்ளார். 267 டிரோன்களில் 138 டிரோன்கள் இடைமறித்து தாக்கி அழிக்கப்பட்டதாகவும், 119 டிரோன்கள் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாமல் மாயமாகி விட்டதாக அவர் கூறினார். ஆனால், எஞ்சிய 10 டிரோன்களின் நிலை குறித்து அவர் விளக்கவில்லை. ஆனால், கீவ் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் அவை தாக்கியதாக ஆயுதப் படையினர் தெரிவித்துள்ளனர்.


மேலும், இந்த டிரோன்களோடு, 3 நெடுந்தொலை ஏவுகணை தாக்குதலையும் ரஷ்யா நடத்தியுள்ளதாகவும், அதில், உக்ரைனின் 5 பகுதிகளில் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவம் குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியதாவது:
ஒரே இரவில் 200க்கும் மேற்பட்ட டிரோன் தாக்குலில் ரஷ்யா ஈடுபட்டது. ரஷ்யாவின் இந்த வான்வழி பயங்கரவாதத்திற்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். உக்ரைனுக்கு ஆதரவாக கூட்டணி நாடுகள் துணை நிற்க வேண்டும். ஒவ்வொரு நாளும் எங்களின் மக்கள், இதுபோன்ற வான்வழி பயங்கரவாதத்திற்கு எதிராக நிற்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement