யு.எஸ்.ஏ.ஐ.டி., அளித்த நிதியை தேர்தலுக்கு பயன்படுத்தவில்லை

புதுடில்லி: 'அமெரிக்காவின் யு.எஸ்.ஏ.ஐ.டி., அமைப்பு, 2023 - 24ல் அளித்த நிதி, இந்தியாவில் ஓட்டுப்பதிவை அதிகரிக்க பயன்படுத்தப்படவில்லை' என, நம் நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.


இந்தியாவிற்கான அமெரிக்காவின் இருதரப்பு மேம்பாட்டு உதவி, 1951ல் துவங்கியது. இந்த நிதி, யு.எஸ்.ஏ.ஐ.டி., எனப்படும், சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனத்தால் வழங்கப்படுகிறது.


இந்த வகையில், இந்தியாவில் நிறைவேற்றப்பட்ட, 555க்கும் அதிகமான திட்டப்பணிகளுக்கு, யு.எஸ்.ஏ.ஐ.டி., இதுவரை, 1.46 லட்சம் கோடி ரூபாய் நிதி அளித்துள்ளது.



அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடன் ஆட்சியின் போது, இந்தியாவில் ஓட்டுப்பதிவு விகிதத்தை அதிகரிக்க, அமெரிக்கா 182 கோடி ரூபாய் நிதி அளித்ததாக தற்போதைய அதிபர் டிரம்ப் நிர்வாகம் குற்றஞ்சாட்டியது.

இது இந்திய அரசியலில் புயலை கிளப்பியது. இந்நிலையில், 2023 - 24ம் நிதியாண்டில், யு.எஸ்.ஏ.ஐ.டி., அளித்த நிதி குறித்த அறிக்கையை மத்திய நிதி அமைச்கம் வெளியிட்டுள்ளது. அதன் விபரம்:

இந்தியாவில், 2023 - 24ல், 6,450 கோடி ரூபாய் மதிப்பிலான ஏழு திட்டங்களுக்கு இந்திய அரசுடன் இணைந்து யு.எஸ்.ஏ.ஐ.டி., நிதி அளித்துள்ளது.

அந்த திட்டத்திற்காக, யு.எஸ்.ஏ.ஐ.டி., 825 கோடி ரூபாய் அளித்தது. ஆனால் அந்த நிதி, ஓட்டுப்பதிவு மேம்பாட்டுக்கு பயன்படுத்தப்படவில்லை.

அவை விவசாயம், உணவு பாதுகாப்பு, குடிநீர், சுகாதாரம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட துறை சார்ந்த திட்டங்களுக்காக செலவிடப்பட்டன.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement