3500 பணியிடங்கள் காலி கிராம செவிலியர்கள் அவதி

சென்னை : தமிழகத்தில், துணை சுகாதார நிலையங்களில், 3500க்கும் மேற்பட்ட, கிராம சுகாதார செவிலியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால் ஒருவரே மூன்று முதல் ஐந்து மையங்களை கவனிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு சுகாதார பார்வையாளர் சங்கத்தின் பொருளாளரான, கிராம சுகாதார செவிலியர் தமிழ்ச்செல்வி கூறியதாவது:

தமிழகத்தில், 8,700 துணை சுகாதார நிலையங்கள் உள்ளன. இவற்றை ஆரம்பிக்கும் போது, 5000 மக்கள் தொகைக்கு ஒரு துணை சுகாதார நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப, துணை சுகாதார நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவில்லை.

இங்கு பணிபுரியும் கிராம சுகாதார செவிலியர்கள், தடுப்பூசி செலுத்துவது, கர்ப்பிணிகளின் சுகாதாரத்தை உறுதி செய்வது, பதிவேடுகளை பராமரிப்பது, பிரசவத்திற்கு பின், தாய் சேய் நலனை கண்காணிப்பது, கிராமங்களில் குடும்ப கட்டுப்பாடு மற்றும் நோய் தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது உள்ளிட்ட பணிகளை செய்து வருகின்றனர்.

தற்போது, 3,500க்கும் மேற்பட்ட, கிராம சுகாதார செவிலியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், ஒரு செவிலியரே மூன்று முதல் ஐந்து நிலையங்களை, கவனிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பணிச்சுமை காரணமாக, தற்போது பலரும் கூடுதல் மையங்களை நிராகரித்து வருகின்றனர். இதனால், தடுப்பூசி போடுவது, கர்ப்பிணிகளின் சுகாதாரத்தை உறுதி செய்வது உள்ளிட்ட பணிகளை, முறையாக செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தர்மபுரி, கோவை, திருப்பூர் மாவட்டங்களில், 30,000 மக்களுக்கு, ஒரு கிராம சுகாதார செவிலியர் என்ற அடிப்படையில் பணியாற்றி வருகிறோம். எனவே காலியிடங்களை நிரப்புவதில் நிலவி வரும் பிரச்னையை அரசு கைவிட்டு இரண்டு ஆண்டு பயிற்சி முடித்து, ஐந்து ஆண்டுகளாக பணி வேண்டி காத்திருக்கும், 1800 அங்கன்வாடி ஊழியர்களுக்கு, முன்னுரிமை அடிப்படையில் விரைந்து பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

இல்லையெனில் பணி புறக்கணிப்பு போராட்டத்தை துவக்குவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement