ஆந்திராவில் யானைகள் தாக்கி 5 பக்தர்கள் பரிதாப பலி

2


அமரவாதி: ஆந்திராவில் கோவிலுக்கு சென்று கொண்டிருந்த பக்தர்கள் 5 பேர் காட்டு யானைகள் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


ஆந்திராவின் அன்னமய்யா மாவட்டத்தில் உள்ள தலகோனாவில் உள்ள சிவன் கோவிலுக்கு மகாசிவராத்திரி கொண்டாட்டத்திற்காக பக்தர்கள் சென்று கொண்டிருந்தனர். இன்று (பிப்.,25) அதிகாலை 5.30 மணியளவில் சேஷாசலம் வனப்பகுதி வழியாக நடந்து சென்றபோது யானைக் கூட்டம் தாக்கியதில் 5 பக்தர்கள் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர்.

பக்தர்கள் கூச்சலிட்டு யானைகளை பயமுறுத்த முயன்றதாக ஒரு போலீஸ் அதிகாரி கூறினார். மேலும் அவர் கூறியதாவது: பக்தர்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடினர். யானைகள் ஆக்ரோஷமாகின. அவர்களை சுற்றி வளைத்துத் தாக்கின. யானைகள் மிதித்ததில் ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவ்வாறு அவர் கூறினார்.



போலீசார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணியைத் தொடங்கினர். காயமடைந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் இருவரின் நிலை இன்னும் கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

Advertisement