ரேணுகாசாமி கொலை குற்றவாளிகளை அப்ரூவர்களாக மாற்ற முயற்சியா?

பெங்களூரு; நடிகர் தர்ஷன் மீதான ரேணுகாசாமி கொலை வழக்கின் விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவர்களை அப்ரூவர்களாக மாற்ற போலீசார் முயற்சிக்கின்றனர் என்று தர்ஷன்தரப்பு வக்கீல் சுனில்குற்றம் சாட்டினார்.

பிரபல கன்னட நடிகர் தர்ஷன். இவரது நெருங்கிய தோழி பவித்ரா கவுடா. பவித்ராவுக்கு சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி என்பவர்,ஆபாச குறுந்தகவல்கள் அனுப்பினார்.

ஆத்திரமடைந்த தர்ஷன், கடந்த ஆண்டு ஜூனில் ரேணுகாசாமியை, பெங்களூரு அழைத்து வந்து தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலை செய்து, பிணத்தை சாக்கடையில் வீசி விட்டு சென்றார். இந்த வழக்கில் தர்ஷன், பவித்ரா உட்பட 17 பேரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்த தர்ஷன், ஏக போக வசதிகளை அனுபவிக்கும் வீடியோ வெளியானதால், பல்லாரி சிறைக்கு மாற்றப்பட்டார்.

தொடர்ந்து, 100 நாட்களுக்கும் மேலாக சிறையிலேயே காலத்தை கடத்தினார். இவருக்கு கடந்த ஆண்டு அக்டோபரில் மருத்துவ காரணங்களுக்காக, இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டது.

பின்னர், டிசம்பரில் நிபந்தனை ஜாமின்வழங்கப்பட்டது.

தற்போது வரை ஜாமினில் உள்ளார். இவருக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்யக் கோரி, கர்நாடகா அரசு தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தற்போது, இந்த வழக்கின் விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.

தர்ஷன், பவித்ரா உட்படஅவரது கூட்டாளிகளும், நேற்று பெங்களூரில் உள்ள 57வது சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர். அப்போது தர்ஷனை பார்ப்பதற்கு ரசிகர்கள் கூட்டம் காணப்பட்டது.

நீதிபதி ஜெய்சங்கர் தலைமையில் வழக்கு விசாரணைக்கு வந்தது.

தர்ஷன் மற்றும் அவரது கூட்டாளிகளின் தரப்பில் வக்கீல் சுனில் வாதிடுகையில், ''அப்ரூவராக மாறும் படி, குற்றம் சாட்டப்பட்டவர்களை மாற்ற போலீசார் முயற்சி செய்கின்றனர். இந்த போக்கை போலீசார் நிறுத்த வேண்டும்,'' என்றார்.

விசாரணைக்கு பின், நீதிபதி ஜெய்சங்கர் கூறுகையில், ''குற்றவாளிகளை அப்ரூவராக மாற்ற போலீசாரால் முடியாது. இதற்கு நீதிமன்றத்தின் ஒப்புதல் அவசியம்.

''போலீசார் தரப்பில் நெருக்கடி கொடுக்கப்பட்டால், மனு அளியுங்கள். அதன் மீது விசாரணை நடத்தப்படும். அடுத்த விசாரணை ஏப்ரல் 8ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது,'' என்றார்.

Advertisement