டிஜிட்டல் பயன்பாட்டால் ஏற்படும் பார்வை இழப்பை தடுப்பது எப்படி ஜோதி கண் மருத்துவமனை நிறுவனர் ஆலோசனை

புதுச்சேரி: புதுச்சேரி ஜோதி கண்பராமரிப்பு மைய நிறுவனர் டாக்டர் வனஜா வைத்தியநாதன் கூறியதாவது:

டிஜிட்டல் சகாப்தத்தில், மொபைல் மற்றும் கணினி சாதனங்களின் உபயோகத்தால் கண் சிமிட்டுதல் அறவே குறைந்துள்ளது. எண்ணெய் சுரப்பிகளின் அடைப்பு ஏற்பட்டு, கண் வறட்சி பாதிப்பு ஏற்படுகிறது.

கண் வறட்சி நோயை புரிந்து கொண்டால், அதனால், ஏற்படும் பாதிப்புகளை தடுக்கலாம்.

கண்ணீர் மூன்று அடுக்குகளை கொண்டது. அவை ஓட்டு பகுதி, நீர் பகுதி, எண்ணெய் அடுக்கு ஆகும். இவை தான் கண்களை ஈரப்பதமாக வைத்திருக்கும் திரவங்கள். கண்ணீரில் குறைந்த எண்ணெய் அல்லது தரமற்ற எண்ணெய் இருப்பதால், உங்கள் கண்கள் நமைச்சல், எரிச்சல் அல்லது வறட்சியாக இருக்கலாம்.

சிலருக்கு பார்வை மங்கலாக இருக்கும். சில நாள்பட்ட எம்.ஜி.டி. நோயாளிகளுக்கு, கருவிழி புண்கள் மற்றும் பிரச்னைகள் ஏற்பட்டு பார்வைக்கு ஆபத்து ஏற்படலாம்.

காரணங்கள்



கண் இமைகளை அசுத்தமாக வைத்திருத்தல், புகைபிடித்தல் மற்றும் பொரிக்கப்பட்ட உணவு அதிகம் எடுத்தல், டி.வி. அதிகம் பார்ப்பதால், உலர் கண் அறிகுறிகள் ஏற்படலாம்.

கிளாகோமா நோயாளிகளில் 40 சதவீதம் பேர் உலர் கண் அறிகுறிகளை கொண்டுள்ளன.

மீபோமியன் சுரப்பி செயலிழப்புக்கு சிகிச்சையளிக்க அமெரிக்கா மருத்துவ நிர்வாகம் அளித்த ஒரே மின்னணு சாதனம் லிப்பிப்ளோ ஆகும்.

லிப்பிப்ளோ வெக்டார் வெப்ப துடிப்பு, தொழில் நுட்பத்தையும் துல்லியமான வெப்பத்தின் காப்பரிமை பெற்ற வழிமுறையையும் பயன்படுத்துகிறது. மீபோமியன் சுரப்பிகளில் இருந்து அடைப்புகளை அகற்ற பயன்படுத்தப்படுகிறது.

தடுப்பு முறைகள்



நீண்ட நேரம் டிவி அல்லது கணினி பார்த்துக் கொண்டிருந்தால் 20 நிமிடங்களுக்கு ஒரு முறை 20 முறை கண்களை சிமிட்டி 20 விநாடிகளுக்கு 210 அடி துாரத்தில் வேறு எங்கையாவது பார்ப்பது, கண் திசைகளுக்கு ஒய்வளிக்கும். ஒரு நிமிட இடைவேளைக்கு பிறகு மீண்டும் வேலையை தொடரலாம்.

இரவு 11 மணி முதல் காலை 4 மணி வரை, உடலை சீரமைத்து புதுப்பிக்கும் மெலட்டோனின் எனும் ஹார்மோன் இருட்டில் ஆழ்ந்த துாக்கத்தில் மட்டும் தான் சுரக்கிறது. மொபைல் மற்றும் டிஜிட்டல் சாதனங்களை மாலை 6 அல்லது 7 மணிக்குப் பிறகு பயன்படுத்தாமல் இருந்தால் மட்டுமே ஆழ்ந்த மற்றும் தரமான துாக்கம் கிடைக்கும்.

எனவே, கண்களை போதுமான அளவு இமைத்தல் மற்றும் சாதனங்களை உபயோகிக்கும் போது 20-20-20 விதியை கடைபிடித்தல் மிகவும் அவசியம்.

மாலை நேரங்களில் டிஜிட்டல் சாதனங்களின் பயன்பாட்டை கட்டுப்படுத்துதல், துாக்கத்தின் தரத்தை மேம்படுத்தி வாழ்க்கை முறை நோய்களை தடுக்கும் என்றார்.

Advertisement