'சர்வீஸ் பிளேஸ்மென்ட்' டாக்டர், செவிலியர்கள் காரைக்காலுக்கு திரும்ப கவர்னர் உத்தரவு

புதுச்சேரி: காரைக்கால் அரசு மருத்துவமனையின் செயல்பாடுகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் கவர்னர் கைலாஷ்நாதன் தலைமையில் நடந்தது.

மருத்துவமனை செயல்பாடுகள், உள்கட்டமைப்பு வசதி, மருத்துவ பணியாளர்கள் விபரம், மருத்துவ வசதிகள் குறித்து காணொலி காட்சி மூலம் விளக்கப்பட்டது.

கூட்டத்தில், காரைக்கால் மருத்துவமனைக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டு, 'சர்வீஸ் பிளேஸ்மென்ட்' அடிப்படையில் புதுச்சேரியில் பணியாற்றும் டாக்டர்கள் செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களை உடனடியாக காரைக்காலுக்கு திருப்பி அனுப்ப வேண்டும். சென்டாக் நிதி உதவி பெற்று முதுநிலை மருத்துவ கல்வி பயிலும் மாணவர்கள், படிப்பு முடிந்தபின்பு ஒரு ஆண்டு காலம் அரசு மருத்துவமனையில் சேவையாற்ற ஒப்பந்தம் செய்ய வேண்டும்.

மத்திய அரசின் திட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்படும் தீவிர சிகிச்சை பிரிவு, ஆயுஷ் மருத்துவமனை, வெளிப்புற நோயாளிகள் சிகிச்சை பிரிவுக்கான திட்ட வரைவு, ஒப்பந்த புள்ளி கோரும் நடைமுறையை விரைவுப்படுத்த வேண்டும்.

பொதுமக்களுக்கான உயர்தர மருத்துவ சிகிச்சை அளிக்க காரைக்கால் ஜிப்மருடன் இணைந்து செயல்படலாம். மருத்துவ சிகிச்சையில் பாதிப்பு ஏற்படாத வகையில் மருத்து உபகரணங்கள் பராமரிக்க ஒப்பந்தம் செய்ய வேண்டும். வரும் மழை காலத்திற்குள் கட்டட கூரை, சுவர்கள், கழிப்பறை ஒழுகல்களை சரிசெய்ய வேண்டும். மருத்துவ சேவையின் தரம் குறித்த நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக அதன் தரத்தை உயர்த்த வேண்டும் என, கவர்னர் கைலாஷ்நாதன் உத்தரவிட்டார்.

கூட்டத்தில் கவர்னரின் செயலர் மணிகண்டன், சுகாதாரத்துறைச் செயலர் ஜெயந்தகுமார்ரே, செயலர் முத்தம்மா, சுகாதாரத்துறை இயக்குநர் ரவிச்சந்திரன், மருத்துவ கண்காணிப்பாளர் செவ்வேள், காரைக்கால் மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் கண்ணகி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement