விளையாட்டு உபகரணங்களின்றி தவிக்கும் மாணவர்கள் ஒதுக்கீட்டில் வாய்ப்புகளை பறிகொடுக்கும் அவலம்

கோவை: பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் விளையாட்டு மைதானம், உபகரணங்கள் மட்டுமின்றி, உடற்கல்வி ஆசிரியர்கள் பற்றாக்குறையும் நிலவுவதால், மாணவர்கள் விளையாட்டு துறையில் சாதிப்பது கேள்விக்குறியாகியுள்ளது.

கோவை மாவட்டத்தில், தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை என, 1,247 அரசுப் பள்ளிகளும், 148 மாநகராட்சி பள்ளிகளும் உள்ளன. இவற்றில் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயில்கின்றனர்.

மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த கூடுதல் வகுப்பறை, ஆய்வகம் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்கென, பள்ளி மைதானங்களில் இடம் எடுத்துக்கொள்ளப்படுகிறது.கிட்டத்தட்ட, 80 சதவீத பள்ளிகளில் மைதானம் இல்லாத அவலம் காணப்படுகிறது.

உதாரணத்துக்கு, சிங்காநல்லுாரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ஆர்.எஸ்.புரம், மாநகராட்சி பெண்கள் உயர்நிலைப் பள்ளி, ஒப்பணக்கார வீதி மாநகராட்சி பள்ளிகளில் இந்நிலை உள்ளது.

மூன்று ஆசிரியர்கள் இருக்கும் இடத்தில் ஒரு ஆசிரியர்; சில பள்ளிகளில் ஆசிரியர்களே இல்லை. சில பள்ளிகளில் பகுதி நேரமாக ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இப்படி, ஆசிரியர், மைதானம், உபகரணங்கள் பற்றாக்குறையால் ஏழை மாணவர்கள் விளையாட்டு துறையில் சாதிக்க முடியாததுடன், விளையாட்டு பிரிவு ஒதுக்கீட்டில் கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் வாய்ப்புகளை பறிகொடுக்கும் நிலை நிலவுவதாக, புலம்பல்கள் எழுகின்றன.

உபகரணங்கள் இல்லை!



உடற்கல்வி ஆசிரியர்கள் கூறுகையில், 'மாநகராட்சி பள்ளிகளில், 16 முதல், 20 உடற்கல்வி ஆசிரியர்களே பணி நிரந்தரமானவர்கள். மற்றபடி விளையாட்டு, நடனம், இசை ஆகியவற்றுக்கு பகுதி நேரமாக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் வாரத்துக்கு ஓரிரு நாட்கள் மட்டுமே வகுப்பு எடுக்கின்றனர். அரசுப் பள்ளிகளிலும் இதே நிலைதான்.

போதிய விளையாட்டு உபகரணங்கள், மைதானங்களும் பல பள்ளிகளில் இல்லாமல், மாணவர்களால் எப்படி சாதிக்க முடியும்' என்றனர்.

20 ஆண்டுகள் காத்திருப்பு!

வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த, உடற்கல்வி ஆசிரியர்கள் கூறுகையில், 'உடற்கல்வி படிப்பை முடித்து, 20 ஆண்டுகளுக்கு முன்பு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோம். கோவை மாவட்டத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில், 60 முதல், 70 உடற்கல்வி ஆசிரியர்கள் இல்லை. தமிழகத்தில், 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளன. அரசுப் பள்ளிகளில் எங்களுக்கு பணி கோரி போராடி வருகிறோம்' என்றனர்.

Advertisement