கடைக்கு உரிமம் தந்து வசூல் 'டுபாக்கூர்' அதிகாரிகள் கைது

சென்னை,மாநகராட்சியின் ராயபுரம் மண்டலத்திற்கு உட்பட்ட, 62 வது வார்டு உரிமம் வழங்கும் ஆய்வாளர் லோகநாதன். கடந்த, 26ம் தேதி சிந்தாதிரிப்பேட்டை மேற்கு கூவம் சாலையில் உள்ள மீன்கடையில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, அங்குள்ள கடைகளில், மாநகராட்சி பெயரில் வழங்கப்பட்ட உரிம ஆணை போலியானது என்று கண்டறிந்தார்.
இதுகுறித்து, கடையின் உரிமையாளரிடம் விசாரித்தபோது, மூன்று பேர் சுகாதாரத்துறை அதிகாரிகள் போல நடித்து, போலியான உரிம ஆணை வழங்கி, 15,800 ரூபாய் வாங்கிச் சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து, சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில், லோகநாதன் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.
ராயபுரத்தைச் சேர்ந்த ரோகித், 30, புதுப்பேட்டையைச் சேர்ந்த சந்திரசேகர், 37, கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த பாபு, 30 ஆகிய மூவரும், சுகாதார துறை அதிகாரிகள் போல நடித்து, போலி உரிம ஆணை வழங்கி, மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
மூன்று பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து போலி அடையாள அட்டைகளை பறிமுதல் செய்தனர்.