தேவகோட்டை வீடுகளில் கொள்ளை தாய், மகன், மகள் உட்பட 4 பேர் கைது

தேவகோட்டை : சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் இரண்டு வீடுகளில் நகைகளை கொள்ளையடித்தவர், உதவிய தாய், மகன், மகள் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.


தேவகோட்டை பாண்டித்துரை மனைவி, ஆசிரியை சீதாலட்சுமி. பிப்., 23 பகலில் சந்தைக்கு போய்விட்டு வருவதற்குள் வீட்டு கதவை உடைத்து பீரோவில் இருந்த 40 சவரன் தங்க நகை, 2.50 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்று விட்டனர். மேலும், அங்கிருந்து 200 மீட்டர் துாரத்தில் உள்ள ராஜாமணி என்பவர் வீட்டில் 14 சவரன், 15,000 ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டன.


டி.எஸ்.பி., கவுதம் மற்றும் போலீசார், 'சிசிடிவி' கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். காரைக்குடியில் ஒரு வாரத்திற்கு முன்பு திருடு போன டூ-வீலரை கொள்ளையன் ஓட்டி வந்ததும், திருடியவர் காரைக்குடி சத்யா நகரை சேர்ந்த சரவணன், 40, என்பதும் தெரிய வந்தது.


திருடிய அந்த டூ-வீலரை, அவர் ஓரிடத்தில் நிறுத்தி விட்டு, அதன் நம்பர் பிளேட்டை உடைத்தும், ஆயுதங்களை போட்டு விட்டும், தோழியுடன் திருச்செந்துார் சென்றிருப்பதும் தெரிய வந்து, அவரை போலீசார் பிடித்தனர்.


அவர் மீதுள்ள, 18 திருட்டு வழக்குகளில் ஆறில் தண்டனை பெற்றுள்ளார். இரு வீடுகளிலும் திருடிய நகை, பணம், இரண்டு மொபைல் போன்களை பறிமுதல் செய்து, சரவணனை கைது செய்தனர்.


அவரின் தோழி, காரைக்குடி கழனிவாசல் ராஜ்குமார் என்பவரின் மனைவி செல்வி, 40, செல்வியின் மகன் கார்த்திகேயன், 20, மகள் பிர்யதர்ஷினி, 22, ஆகியோர், சரவணனின் திருட்டுக்கு உடந்தையாக இருந்ததாக போலீசார் அவர்களையும் கைது செய்தனர்.

Advertisement