தமிழக மக்களை குழப்புவதே தி.மு.க.,வின் நோக்கம்; அண்ணாமலை தாக்கு

3

சென்னை: 'அனைத்துக் கட்சி கூட்டத்தில் பா.ஜ., பங்கேற்காது. தமிழக மக்களை குழப்புவதே தி.மு.க.,வின் நோக்கம்' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

இது குறித்து நிருபர்கள் சந்திப்பில் அண்ணாமலை கூறியதாவது: அனைத்துக் கட்சி கூட்டத்தில் பா.ஜ., பங்கேற்காது. கூட்டத்தில் பங்கேற்காதது குறித்து முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளது. எம்.பி., தொகுதிகள் குறையும் என பிரச்னையை ஆரம்பித்தது முதல்வர் ஸ்டாலின். நாங்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளோம். தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் புரளியை பரப்பி வருகின்றனர்.



தமிழக மக்களை குழப்புவதே தி.மு.க.,வின் நோக்கம். விகிதாச்சார அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு என்று சொல்லிவிட்டோம். தெளிவாக விளக்கம் சொன்ன பிறகு அனைத்துக் கட்சி கூட்டம் எதற்காக? தொகுதி மறுசீரமைப்பு பற்றி புரிந்துக் கொள்ளாமல் மக்களை குழப்புகின்றனர். ஒரே நாடு ஒரே தேர்தல் கொண்டு வந்த போதும் தி.மு.க., மக்களை குழப்பியது. தமிழகத்தில் உள்ள பிரச்னைகள் பற்றி பேசாமல் மக்களை திசை திருப்புகின்றனர்.


மக்கள் தொகை அடிப்படையில் தொகுதியை பிரிப்பது காங்கிரசின் திட்டம். அரசியலில் இருந்து வைகோ போன்றவர்கள் ஓய்வு பெற வேண்டும். முதல்வர் தனது பிறந்தநாள் விழாவில், மேடையில் ஏறி பா.ஜ.,வை திட்டினார். பா.ஜ.,வை யார் அதிகமாக திட்டுவது என்ற போட்டி தான் அவர்களுக்குள் இருந்தது. 4 ஆண்டுகளில் என்ன வேலை செய்தீர்கள் என்று பேச வேண்டியது தானே? இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

Advertisement