கடம்பத்துாரில் இருந்து மப்பேடு சரக்கு முனையம் வரை.புதிய ரயில் பாதை 20 கி.மீ.,க்கு 88 ஏக்கர் நிலம் கையகப்படுத்த முடிவு

திருவள்ளூர், திருவள்ளூர் அடுத்த மப்பேடில் 182 ஏக்கர் பரப்பளவில், 1,423 கோடி ரூபாய் மதிப்பில், புதிதாக சரக்கு போக்குவரத்து பூங்கா அமைக்கப்பட உள்ளது. இதற்காக, கடம்பத்துார் - மப்பேடு வரை, 20 கி.மீட்டர் துாரத்திற்கு புதிய ரயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டு, 88 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.
..

மத்திய அரசின் 'பாரத் மாலா பரியோஜனா' திட்டத்தின் கீழ், மாநிலம் முழுதும் 35 சரக்கு போக்குவரத்து பூங்கா அமைக்க முடிவு செய்துள்ளது. இதில் ஒன்றாக தமிழகத்தில், திருவள்ளூர் மாவட்டம் மப்பேடில், பல்முனை சரக்கு போக்குவரத்து பூங்கா அமைய உள்ளது.

இதன் வாயிலாக, சரக்கு போக்குவரத்து செயல்திறன் மேம்பாட்டு போக்குவரத்து செலவு மற்றும் காற்று மாசு குறையும். மேலும், அதிநவீன சரக்கு மேலாண்மை அமைப்பின் வாயிலாக, ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்து செல்லப்படும் சரக்கு போக்குவரத்து தடையின்றி அமையும்.

சரக்கு போக்குவரத்து



அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்துார் ஒன்றியம் மப்பேடு ஊராட்சியில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம், 'நேஷனல் ஹைவே லாஜிஸ்டிக்ஸ்' மேலாண்மை நிறுவனம் மற்றும் சென்னை துறைமுகம் ஆகியவை இணைந்து, பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் 182 ஏக்கரில், 1,423 கோடி ரூபாய் முதலீட்டில் பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்கா துவங்க, 2021ல் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதுகுறித்து பல்முனைய சரக்கு பூங்கா அதிகாரி கூறியதாவது:

இந்தியாவில் 35 இடங்களில் பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்கா அமையவுள்ள நிலையில், தமிழகத்தில் அமையும் முதலாவது பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்காவாக இது அமைந்துள்ளது.

இந்த பூங்கா பகுதியைச் சுற்றிலும், ஸ்ரீபெரும்புதுார், பிள்ளைப்பாக்கம் மற்றும் ஒரகடம் ஆகிய தொழிற்சாலைகள் மிகுந்த பகுதிகளுக்கு மிக அருகில் அமைகிறது. சென்னை எல்லை சுற்றுவட்ட சாலைக்கு மிக அருகில் இந்த பூங்கா அமைந்துள்ளது.

இந்த பூங்காவை சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மற்றும் சென்னை எல்லை சுற்றுச்சாலையுடன் இணைக்கும் வகையில், இப்பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகளும் நடந்து வருகின்றன. இதன் வாயிலாக, 10,000 இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மப்பேடு பல்முனைய சரக்கு பூங்காவிற்கு எளிதில் செல்லும் வகையில், கடம்பத்துார் ரயில் நிலையம் வரை, புதிய ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது. இதற்காக, மப்பேடில், 88 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.

இதுகுறித்து 'டிட்கோ' வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னையைச் சுற்றி சென்னை, எண்ணுார் காமராஜர், காட்டுப்பள்ளி அதானி துறைமுகங்கள் உள்ளன. தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்கள், இந்த துறைமுகங்களை பயன்படுத்தி பிற மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் சரக்குகளை ஏற்றுமதி, இறக்குமதி செய்கின்றன.

சேமிப்பு கிடங்கு



எனவே, அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் கிடங்கு கட்டமைப்பு வசதிகளுடன் சரக்குகளை விரைந்து கையாள, திருவள்ளூர் மாவட்டம், மப்பேடில், 182 ஏக்கரில், 1,423 கோடி ரூபாயில், பல்வகை சரக்கு போக்குவரத்து பூங்கா அமைக்கப்படுகிறது.

இத்திட்டத்தை, 'டிட்கோ' எனப்படும், தமிழக அரசின் தொழில் வளர்ச்சி நிறுவனம், தேசிய நெடுஞ்சாலை சரக்கு போக்குவரத்து மேலாண்மை நிறுவனம், சென்னை துறைமுக பொறுப்பு கழகம், ரயில் விகாஸ் ஆகியவை இணைந்து துவக்கியுள்ள, 'சென்னை பல்வகை சரக்கு போக்குவரத்து பூங்கா' என்ற சிறப்பு முகமை செயல்படுத்துகிறது.

மப்பேடில் சேமிப்பு கிடங்கு, குளிர்பதன கிடங்கு, சரக்குகளை துரிதகதியில் 'பேக்கிங்' செய்யும் வசதி, விரைந்து ஏற்றுமதி, இறக்குமதி செய்வதற்கான இயந்திரங்கள் என, அனைத்து வசதிகளும், மப்பேடு பல்வகை சரக்கு முனைய பூங்காவில் இடம்பெறும்.

மூன்று கட்டங்களாக செயல்படுத்தப்படும் திட்டத்தின் முதல்கட்ட கட்டுமான பணி துவங்கியுள்ளது. இதை, ரிலையன்ஸ் நிறுவனம் மேற்கொள்கிறது.

மப்பேடு சரக்கு முனையத்திற்கு ரயில்கள் வந்து செல்ல வேண்டும். எனவே, அங்கிருந்து, திருவள்ளூரில் ஏற்கனவே உள்ள கடம்பத்துார் ரயில் நிலையத்தில் இருந்து மப்பேடு வரை, 15 - 20 கி.மீ., ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது.

இதற்காக, மப்பேடு மற்றும் சுற்றியுள்ள இடங்களில், 88 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement