பிச்சைக்காரரை மிரட்டி பணம் பறித்தவர் கைது

சென்னை, வேப்பேரி, டவுட்டன் மேம்பாலம் அருகே, நடைபாதையில் வசித்து வருபவர் சிவா, 30. நேற்று முன்தினம் காலை, புரசைவாக்கம் பண்டாரம் தெருவில் குப்பை சேகரித்துக் கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு வந்த மர்ம நபர், கத்தி முனையில் அவரிடமிருந்து, 500 ரூபாயை பறித்து, கொலை மிரட்டல் விடுத்துச் சென்றார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த வேப்பேரி போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், புரசைவாக்கம் சாலைமா நகரைச் சேர்ந்த நிர்மல்ராஜ், 23, என்பவர் பணம் பறித்தது தெரிந்தது.

நேற்று அவரை கைது செய்த போலீசார், கத்தியை பறிமுதல் செய்தனர். நிர்மல்ராஜ், வேப்பேரி காவல் நிலைய பழைய குற்றவாளி என்பதும், அவர் மீது, கொள்ளை, அடிதடி உட்பட, 10 குற்ற வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது.

Advertisement