பதவியேற்பில் உளறியதால் சர்ச்சையில் சிக்கிய மேயர்

10

ராய்ப்பூர், சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாநகராட்சி மேயர், பதவிப்பிரமாணத்தின் போது, 'இறையாண்மை' என கூறுவதற்கு பதிலாக, 'வகுப்புவாதம்' என, வாய் தவறி கூறியது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்வர் விஷ்ணு தியோ சாய் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.

இங்குள்ள பிலாஸ்பூர் மாநகராட்சி தேர்தலில் மொத்தம் உள்ள 70 வார்டுகளில், 49ல் பா.ஜ., வென்றது.

இதையடுத்து, பா.ஜ.,வைச் சேர்ந்த பூஜா விதானி மேயராக தேர்வானார். அவரது பதவியேற்பு விழா, முங்கேலி நாகா மைதானத்தில், பொதுமக்கள் முன்னிலையில் நேற்று நடந்தது.

பூஜா விதானி பதவி பிரமாணம் ஏற்றபோது, ''இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு உண்மையாக நடந்து கொள்வேன். இந்திய ஒருமைப்பாட்டையும், வகுப்புவாதத்தையும் நிலை நாட்டுவேன்,'' என, வாய் தவறி உறுதியேற்றார்.

இறையாண்மை என்பதற்கு பதிலாக வகுப்புவாதம் என கூறியதால், மேடையில் இருந்தவர்கள் உடனடியாக அதை கவனித்து திருத்தியதும், இரண்டாவது முறையாக திருத்தம் செய்து உறுதியேற்றார்.

ஆனால், 'இது பா.ஜ.,வின் நாடகம்' என காங்கிரஸ் விமர்சித்துள்ளது. 'பிலாஸ்பூர் மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர், 1998ல் மாநகராட்சி கவுன்சிலர், மாநில பா.ஜ., மகளிரணி தலைவர் மற்றும் பொதுச் செயலர் என பொறுப்புகளை வகித்த ஒருவர், எப்படி வாய் தவறி உறுதி ஏற்றிருப்பார்' என காங்கிரசார் கேள்வி எழுப்பினர்.

Advertisement