சினிமா நடிகர்களை பின்தொடர்வதால் பொருளாதாரம் உயராது; நிடி ஆயோக் முன்னாள் தலைவர் அமிதாப் காந்த்

18

புதுடில்லி: ''பொழுதுபோக்கு மூலமாகவோ, அல்லது சினிமா நட்சத்திரங்களின் கருத்துக்களை பின்தொடர்வதாலோ, இந்தியப் பொருளாதாரம் உயராது. கடின உழைப்பால் மட்டுமே உயரும்,'' என்று நிடி ஆயோக் முன்னாள் தலைவர் அமிதாப் காந்த் தெரிவித்தார்.

நிடி ஆயோக் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியும், ஜி20 ஷெர்பாவுமான அமிதாப் காந்த், டில்லியில் நடந்த மாநாட்டில் பேசியதாவது:

ஜப்பான், தென் கொரியா மற்றும் சீனா ஆகிய நாடுகள், வலுவான பணி நெறிமுறைகள் மூலம் பொருளாதார வெற்றியை அடைந்துள்ளன.

கடின உழைப்பில் எனக்கு நம்பிக்கை உள்ளது. 80 மணி நேரமாக இருந்தாலும் சரி அல்லது 90 மணி நேரமாக இருந்தாலும் சரி, இந்தியர்கள் கடினமாக உழைக்க வேண்டும். உங்கள் லட்சியம், 4 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தில் இருந்து 30 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர வேண்டுமெனில், வெறும் பொழுதுபோக்கு மூலமாக அதை அடைந்து விட முடியாது; சினிமா நட்சத்திரங்களின்கருத்துக்களை பின் தொடர்வதாலும் முடியாது. கடின உழைப்பால் மட்டுமே முடியும்.


இப்போது கடின உழைப்பின்றி இருப்பதை பற்றி பேசுவது பேஷன் ஆகி விட்டது. ஏன்?காலம் கடத்தாமல், செலவும் அதிகரிக்காத வகையில், உலகத்தரத்தோடு திட்டங்களை குறித்த காலத்தில் நிறைவேற்ற கடினமாக உழைக்க வேண்டும்.


கடினமாக உழைக்காமலேயே இந்தியா சிறந்த நாடாக முடியும் என்று இளம் தலைமுறையினருக்கு தவறான செய்தியை சொல்கிறோம். அது நடக்காது. எந்த ஒரு நாடும், கடினமாக உழைக்காமல் சிறந்த நாடாக முடியாது.இவ்வாறு அமிதாப் காந்த் கூறினார்.


கடந்த சில மாதங்களுக்கு முன், இன்போசிஸ் இணை நிறுவனர் நாராயணமூர்த்தி, வாரம் 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.அவரை தொடர்ந்து, எல் அண்ட் டி நிறுவன சேர்மன் சுப்பிரமணியம், 'வாரம் 90 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும். எவ்வளவு நேரம் தான் வீட்டில் மனைவியை பார்த்துக் கொண்டிருப்பீர்கள்' என்று கூறினார்.


நாராயணமூர்த்தி, சுப்பிரமணியம் இருவரும் கூறியது, இணையத்திலும், பொது வெளியிலும் விவாதங்களை கிளப்பியது. அதன் தொடர்ச்சியாக இப்போது அமிதாப் காந்த், தன் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

Advertisement