தென் ஆப்ரிக்காவை வெல்வோம் * டாம் லதாம் நம்பிக்கை

லாகூர்: ''முத்தரப்பு தொடர் அனுபவத்தை கொண்டு, தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக அரையிறுதியில் வெற்றி பெற முயற்சிப்போம்,'' என டாம் லதாம் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடக்கிறது. நாளை லாகூரில் நடக்கும் இரண்டாவது அரையிறுதியில் தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன. இதுகுறித்து நியூசிலாந்து அணியின் டாம் லதாம் கூறியது:
சில விஷயங்கள் நமது கட்டுப்பாட்டில் இருக்காது. இதுபோல அட்டவணையை நாங்கள் முடிவு செய்வதில்லை. எங்களை பொறுத்தவரையில் ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக விளையாட முயற்சிபோம்.
தற்போது எங்கள் கவனம் தென் ஆப்ரிக்கா மீது திரும்பியுள்ளது. லாகூரில் நடந்த முத்தரப்பு தொடரில் ஏற்கனவே இந்த அணியை வென்றுள்ளோம். இம்முறை அரையிறுதி சவாலை எதிர்கொள்ள, சிறப்பான முறையில் தயாராகி வருகிறோம்.
அப்போது இருந்த அணியில் இல்லாத பல வீரர்கள் அரையிறுதியில் விளையாட உள்ளனர். எனினும் முத்தரப்பு அனுபவத்தை பயன்படுத்தி, வெற்றி பெற முயற்சிப்போம்.
பாகிஸ்தானில் உள்ள ஆடுகளத்தில், துபாய் போல பந்துகளில் அதிக திருப்பம் இருக்காது. ஆனால் பகல், இரவு சூழ்நிலைக்கு ஏற்ப, மாற்றம் ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement