காட்டு யானைகள் அச்சத்தால் வனத்துறை பாதுகாப்புடன் 10ம் வகுப்பு வினாத்தாள்

மூணாறு : மூணாறு பகுதியில் காட்டு யானைகள் அச்சத்தால் வனத்துறையினர் உதவியுடன் பலத்த பாதுகாப்பாக 10ம் வகுப்பு வினா தாள் பள்ளிகளுக்கு கொண்டு செல்லப்பட்டது.


மூணாறு பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவை எஸ்டேட் பகுதிகளில் முகாமிட்டு பகல், இரவாக குடியிருப்பு மற்றும் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் நடமாடுகின்றன. ஒன்றரை மாதமாக மதம் பிடித்த அறிகுறியுடன் நடமாடி வரும் படையப்பா ஆண் காட்டு யானை பல்வேறு சேதங்களையும் ஏற்படுத்தி வருகிறது.


மூணாறு அருகே கூடாரவிளை எஸ்டேட் பகுதியில் ஒரு வாரமாக முகாமிட்டுள்ள படையப்பா யானை பிப்., 28 அப்பகுதி அரசு உயர் நிலைப்பள்ளி வளாகத்தினுள் பகலில் நுழைந்தது. அச்சம் அடைந்த ஆசிரியர்கள், மாணவர்கள் வகுப்பறைகளில் தஞ்சம் அடைந்தனர்.



இந்நிலையில் கேரளாவில் 10ம் வகுப்பு, பிளஸ் -2 பொதுத்தேர்வு நேற்று துவங்கியது. மூணாறு துணை கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகளின் பத்தாம் வகுப்பு வினா தாட்கள் மூணாறு நகரில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி கிளையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அங்கிருந்து பள்ளிகள் தொலை தூரத்தில் உள்ளதால் காட்டு யானைகளுக்கு அஞ்சி கல்வி துறை அதிகாரிகள் முதன் முறையாக வனத்துறையினரின் உதவியை நாடியுள்ளனர்.


அதன்படி கல்விதுறை அதிகாரிகள், போலீசார், வனத்துறையினர் அதிரடி படையினர் உதவியுடன் பலத்த பாதுகாப்பாக கூடாரவிளை, செண்டுவாரை, எல்லபட்டி, வட்டவடை பகுதி அரசு, தனியார் பள்ளிகளுக்கு வினாதாட்கள் கொண்டு செல்லப்பட்டன. இறுதி தேர்வு நடக்கும் மார்ச் 26 வரை இப்பாதுகாப்பு அளிக்க வனத்துறையினர் முன் வந்தனர்.

Advertisement