அரசு இடத்தை அபகரிக்க முயற்சி நடவடிக்கை எடுக்கக் கோரி மனு
விழுப்புரம்,; கண்டாச்சிபுரம் அருகே அரசு வழங்கிய இடத்தை அபகரிக்க முயலும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
கண்டாச்சிபுரம் அடுத்த வீரபாண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜிவ்காந்தி மனைவி கவுதமி, 35; மாற்றுத்திறனாளி. இவரும், அதே பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் சிலர், நேற்று விழுப்புரம் எஸ்.பி.,அலுவலகத்தில் அளித்த புகார் மனு:
ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த எங்களுக்கு, நாங்கள் வசிக்கும் இடத்தில் கடந்த 2023ம் ஆண்டு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் 21 பேருக்கு, அரகண்டநல்லுார் பகுதியில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடத்தில் குடிமனை பட்டா வழங்கி இடத்தை அளந்து கொடுத்தனர்.
இதையடுத்து நாங்கள் கடன் வாங்கி அந்த இடத்தில் குடிசை வீடு கட்டி வசிக்கிறோம்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன் ஆட்களோடு வந்த ஒரு ஆணும், பெண்ணும் எங்களை காலி செய்ய வேண்டும் என மிரட்டினர். எங்களை மிரட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து, எங்களின் இடத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.