நுாறு நாள் வேலை கேட்டு கலெக்டரிடம் பெண்கள் மனு

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டத்தில் நுாறு நாள் திட்டப்பணிகள் பல்வேறு பகுதிகளில் நிறுத்தப்பட்டு விட்டதால், 100 நாள் பணியாளர்கள் பணிக்கு வர வேண்டாம் எனக் கூறப்பட்டுள்ளது. இதனால், திட்டப்பணியாளர்கள் சம்பளமும், வேலையும் இல்லாமல் தவிக்கின்றனர்.

பூதலுார் யூனியனில் வேலை நிறுத்தப்பட்ட நிலையில், மீண்டும் வேலை வழங்க வேண்டும்; நான்கு மாத நிலுவை சம்பளம் வழங்க வேண்டும் என, நேற்று 100க்கும் மேற்பட்ட பெண்கள், கலெக்டர் பிரியங்கா பங்கஜத்திடம் தனித்தனியாக மனு அளித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மா.கம்யூ., மாதர் சங்க மாநில செயலர் தமிழ்ச்செல்வி கூறியதாவது:

பூதலுார் யூனியனில் பல்வேறு கிராமங்களில் நுாறு நாட்கள் வேலை திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், நடப்பட்ட மரக்கன்றுகளுக்கு நீர் பாய்ச்சும் பணி உட்பட பணிகள் முடங்கும் அபாயம் உள்ளது. கலெக்டரிடம் மனு அளித்துள்ளோம். நுாறு நாள் வேலை திட்டம் சம்பளம் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு போட உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement