நிர்மலா தேவி ஜாமின் மனு தள்ளுபடி

மதுரை: பாலியல் ரீதியாக தவறாக நடக்க சில மாணவியரை துாண்டிய வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததை எதிர்த்து பேராசிரியை நிர்மலா தேவி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்தது. தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமின் அனுமதிக்கக் கோரிய அவரது மனுவை தள்ளுபடி செய்தது.


விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் ஒரு கல்லுாரியில் பேராசிரியையாக பணியாற்றியவர் நிர்மலாதேவி. இவர், ''பெரிய பொறுப்பிலுள்ள சிலருடன் அனுசரணையாக நடந்து கொண்டால் பலன் கிடைக்கும்,'' என ஒரு மாணவியிடம் அலைபேசியில் பேசிய ஆடியோ பதிவு வெளியானது. பாலியல் ரீதியாக தவறாக நடக்க சில மாணவியரை துாண்டியதாக 2018ல் அருப்புக்கோட்டை போலீசார்வழக்கு பதிந்த னர். விசாரணை சி.பி.சி.ஐ.டி.,போலீசாருக்கு மாற்றப்பட்டது. ஸ்ரீவில்லி புத்துார் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணை நடந்தது. அந்நீதிமன்றம் நிர்மலா தேவிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து 2024 ஏப்.29ல் உத்தரவிட்டது.

இதை எதிர்த்தும், தண்டனையை நிறுத்தி வைத்து இடைக்கால ஜாமின் அனுமதிக்க உத்தரவிடக்கோரியும் அவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு செய்தார். பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியை கீழமை நீதிமன்றம் விடுதலை செய்ததை எதிர்த்து சி.பி.சி.ஐ.டி.,யும் மேல்முறையீடு செய்தது.

இம்மனுக்களை நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார். அரசு தரப்பு நிர்மலா தேவிக்கு ஜாமின் அனுமதிக்கக்கூடாது என ஆட்சேபம் தெரிவித்தது.

நீதிபதி: நிர்மலா தேவியின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை மார்ச் 14 க்கு ஒத்திவைக்கப்படுகிறது என உத்தரவிட்டார்.

Advertisement