நத்தம் மாரியம்மன் கோயிலில் கொடியேற்றம்

நத்தம்: நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பூக்குழி திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.

காலை 7:00 மணிக்கு மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தபட்டு கோயில் முன் உள்ள கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது.

கொடிமரம், நாணல்புல், மாவிலை, வண்ண பூமாலைகள் இணைத்து மாரியம்மன் உருவம்பொரித்த கொடி மரத்திற்கு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தது. மூலவர் மாரியம்மன் வெள்ளி மயில் வாகனத்தில் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

நத்தம் பேரூராட்சி தலைவர் சேக்சிக்கந்தர்பாட்சா, செயல்அலுவலர் திருஞானசம்பந்தன் பங்கேற்றனர். இன்று அதிகாலையில் நத்தம் கரந்தமலையில் கன்னிமார் தீர்த்தத்தில் புனித நீராடி தீர்த்தம் எடுத்து வந்து சந்தன கருப்புசுவாமி கோயிலில் பக்தர்கள் ஒன்று கூடி அங்கிருந்து பக்தர்களை ஊர்வலமாக மாரியம்மன் கோயிலுக்கு அழைத்து செல்லப்படுவர்.

மஞ்சள் காப்பு கட்டி 15 நாட்கள் விரதம் தொடங்குவார்கள். முக்கிய நிகழ்வான பூக்குழி திருவிழா மார்ச் 18ல் நடக்கிறது.

Advertisement