ஒரே அலுவலகத்தில் பல ஆண்டுகளை கடந்த அலுவலர்கள்

1

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டத்தில் பத்தாண்டுகளுக்கு மேல் அரசு அலுவலகங்களில் பணியாற்றும் அலுவலர்களை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.



மாவட்டத்தில் வருவாய்துறை, பதிவு துறை, போலீஸ், ஊரக உள்ளாட்சித் துறை, நகராட்சி, வனத்துறை, மின்வாரியம், தோட்டக்கலைத்துறை, பொது சுகாதாரம், நெடுஞ்சாலை, பொதுப்பணி, சுற்றுலா உள்ளிட்ட அரசு துறை அலுவலகங்களில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் அரசு அலுவலர்களால் ஏராளமான பாதிப்புகள் தொடர்கின்றன.


பொதுவாக அரசு அலுவலர்கள் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பணியிட மாற்றம் செய்வது வழக்கம். இருந்த போதும் இந்த நடைமுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் முரண்பாடாக உள்ளது. பெயரளவிற்கு இடமாற்றம் செய்தது போன்ற மாயை ஏற்படுத்தி இருக்கும் இடத்திலேயே பணி செய்வதை ஏராளமான பணியாளர்கள் கடைபிடிக்கின்றனர். தாங்கள் நீண்ட காலம் பணியாற்றும் அலுவலங்களில் கோலோச்சி , வருகை தரும் சாமானிய மக்களின் பணிகளுக்கு இடையூறாக உள்ளனர். மேலும் இவர்கள் துறை ரீதியான பணிகளுக்கு வரும் வருபவர்களை குறி வைத்து வசூலில் ஈடுபடுகின்றனர். இவர்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் புகார் அளித்தும் உயர் அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கவனம் செலுத்துங்க



கொடைக்கானல் சுற்றுலாத்தலமாக உள்ளதால் பணப்புழக்கம் அதிகம். இங்குள்ள அனைத்து துறை அலுவலகங்களிலும் குறைந்தது 10 ஆண்டுகளுக்கு மேல் ஏராளமானவர்கள் பணியில் உள்ளனர். கொடைக்கானல் சார் பதிவாளர் அலுவலகத்தில் சார் பதிவாளர்களுக்கு இடமாற்றம் வரும் ஆனால் அங்கு பணியாற்றும் இதர பணியாளர்களுக்கு பணியிட மாறுதல் என்பது குதிரை கொம்பாக உள்ளது. இவர்களை இடம் மாற்றம் செய்தால்தான் அரசுத்துறை அலுவலகங்கள் புத்துணர்ச்சி பெறும். தற்போதைய கலெக்டர் இவ்விஷயத்தில் கவனம் செலுத்தி மாவட்டத்தில் ஆண்டு கணக்கில் பணிபுரியும் நபர்களை அடையாளம் கண்டு இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாலசுப்பிரமணி, இயற்கை ஆர்வலர், கொடைக்கானல் .

.

Advertisement