மானாவாரி பருத்தியில் நஷ்டம்; நிவாரணம் வழங்க கோரிக்கை

உடுமலை; மானாவாரி பருத்தி சாகுபடியில் நஷ்டமடைந்த விவசாயிகளுக்கு, அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

உடுமலை, குடிமங்கலம் வட்டாரத்தில், மானவாரியாகவும், பி.ஏ.பி., மண்டல பாசனத்துக்கு, பிரதான சாகுபடியாக பருத்தி இருந்தது. பல்வேறு காரணங்களால், இச்சாகுபடியை விவசாயிகள் கைவிட்டனர்.

கடந்த சில ஆண்டுகளாக குறைந்த பரப்பில், பருத்தி சாகுபடியாகிறது. வடகிழக்கு பருவமழையை ஆதாரமாகக்கொண்டு கடந்த சீசனில், பருத்தி சாகுபடி செய்தவர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

விவசாயிகள் கூறியதாவது; விதை நடவுக்கு பிறகு, போதிய மழை கிடைக்கவில்லை. தாமதமாக, பருத்தி செடிகள், பூ விடும் தருணத்தில், அதிக மழைப்பொழிவு இருந்தது.

காய் பிடிக்கும் தருணத்தில், மேகமூட்டத்துடன் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நீடித்தது. இதனால், நோய்த்தாக்குதல் அதிகரித்து, பிஞ்சு உதிர்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டது.

வழக்கமாக ஏக்கருக்கு, 130 கிலோ கொண்ட, 13 பொதி வரை மகசூல் கிடைக்கும். ஆனால், கடந்த சீசனில், 7 பொதி கூட கிடைக்கவில்லை. தரமும் பாதிக்கப்பட்டதால், கிலோவுக்கு, விலையும் கிடைக்கவில்லை.

இவ்வாறு, ஏக்கருக்கு, 40 ஆயிரம் ரூபாய்க்கு மேல், நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பருத்தி சாகுபடியாளர்களை பாதுகாக்கும் வகையில், அரசு நிவாரணம் வழங்க வேண்டும்.

இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement