மருத்துவமனையில் பணம் முதலீடு பாதிக்கப்பட்டவர்கள் புகார் தரலாம்

சிவகங்கை: மதுரை தனியார் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் முதலீடு செய்து ஏமாந்த முதலீட்டாளர்கள் புகார் அளிக்கலாம் என மதுரை பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி., தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம்அருப்புக்கோட்டை மோகன் மனைவி பானுமதி என்பவரிடம் அருப்புக்கோட்டை தும்முசின்னம்பட்டி டாக்டர் பூர்ணசந்திரன், மனோரஞ்சிதம், கீதா, ஷீபா, கோபாலகிருஷ்ணன் ஆகியோர் மதுரை சிந்தாமணியில் மல்டி ஸ்பெஷலிட்டி மருத்துவமனை கட்டி வருவதாகவும் அதில் முதலீடு செய்யும் பணத்திற்கு 36 சதவீதம் முதல் வட்டி தருவதாகவும் முதலீட்டாளர்களின் குடும்பத்தினருக்கு எல்லா விதமான சிகிச்சைகளும் இலவசமாக வழங்கப்படும்.

முதலீட்டாளர்கள் பரிந்துரைக்கும் நபர்களுக்கு மருத்துவசெலவில் 50 சதவீதம் மானியம் வழங்கப்படும் என்று கூறி ஏமாற்றியுள்ளனர். மருத்துவமனையில் பல லட்சம் ரூபாயை முதலீடு செய்ய முதிர்வு காலம் முடிந்த நிலையில் பணத்தை மீட்டு தருமாறு மதுரை பொருளாதார குற்றப்பிரிவில் பானுமதி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

விசாரணையில் மதுரை சிந்தாமணி மற்றும் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் இயங்கி வந்த சாந்தி மல்டி ஸ்பெஷலிட்டி மருத்துவமனையில் மேலும் முதலீட்டாளர்கள் பணம் செலுத்தி ஏமாற்றப்பட்டதாக தெரிய வருவதால் பணத்தை முதலீடு செய்து பணம் திரும்ப கிடைக்காத பொதுமக்கள் யாரேனும் இருப்பின் தக்க ஆவணங்களுடன் மதுரை தபால்தந்திநகர் விரிவாக்கம் சங்கரபாண்டியன் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement