அஸ்சாமில் இருந்து கோவைக்கு கஞ்சா கடத்தல்; நால்வருக்கு சிறை

கோவை; அஸ்சாமில் இருந்து கோவைக்கு சரக்கு லாரியில் கடத்தி வரப்பட்ட, ஒன்பது கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்; நான்கு பேரை சிறையில் அடைத்தனர்.

அஸ்சாமில் இருந்து கோவைக்கு, சரக்கு லாரியில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு, தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான குழுவினர், தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது கேரள பதிவெண் கொண்ட, சரக்கு லாரி ஒன்று அவிநாசி ரோட்டில் வந்தது. லாரியை சோதனை செய்ததில், அதில் ஒன்பது கிலோ கஞ்சா மறைத்து கடத்தப்படுவது தெரிந்தது. பறிமுதல் செய்த போலீசார், லாரியில் இருந்த நான்கு பேரை கைது செய்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள், கேரள மாநிலம், பாலக்காடு, சித்துாரை சேர்ந்த முகேஷ், 38, வடக்கஞ்சேரியை சேர்ந்த ஷாஜூமோகன், 39, கோவை இடையர்பாளையம், சல்மான்கான், 35, கவுண்டம்பாளையத்தை சேர்ந்த விஷ்ணுபிரசாத், 31 எனத் தெரிந்தது.

கடந்த ஆறு மாதங்களாக இவர்கள், அஸ்சாம் உள்ளிட்ட வடமாநிலங்களில் இருந்து கஞ்சாவை கோவை மற்றும் கேரளாவுக்கு கடத்தி வந்தது தெரிந்தது.

அவர்களை சிறையில் அடைத்த போலீசார் அவர்களிடம் இருந்து, ஒன்பது கிலோ கஞ்சா, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு லாரி, இரு சக்கர வாகனம், நான்கு மொபைல்போன்களை பறிமுதல் செய்தனர்.

Advertisement