பாம்பன் பாலம் இருபுறத்திலும் வளரும் முள்மரங்களால் அவதி சுற்றுலா பயணிகள் அதிருப்தி

ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டத்தின் அடையாளமாக உள்ள பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலம் பராமரிப்பு இன்றி, நுழைவில் இருபுறமும் முள்மரங்கள் வளர்ந்து உள்ளதால், சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி அடைகின்றனர்.

ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடலில் அமைத்த தேசிய நெடுஞ்சாலை பாலம் 1988 முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. துவக்கத்தில் இப்பாலம் இருபுறமும் 400க்கு மேலான மின்விளக்குகள் பொருத்தி மின்னொளியில் ஜொலித்தது. 5 ஆண்டுக்கு ஒருமுறை பாலத்தின் தடுப்பு சுவர், துாண்களை சரிசெய்து புதுப்பித்தனர்.

ஆனால் பாலத்தின் நடைபாதையில் குப்பை, உணவுக் கழிவுகள் சிதறி கிடந்து துர்நாற்றம் வீசுகிறது. சுகாதாரத்தை பராமரிக்க அதிகாரிகள் முன்வருவதில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் பாதிக்கப்படுகின்றனர். பாலம் இருபுறம் நுழைவு பக்கவாட்டில் முள்மரங்கள், புதர்கள் வளர்ந்து கிடக்கிறது. இதனுள் பாம்புகள், விஷ வண்டுகள் புகலிடமாக உள்ளது.

சுற்றுலா பயணிகளை கவரும் முக்கியத்துவம் வாய்ந்த இப்பாலத்தில் குப்பை, முள்மரங்களை அகற்றி சுகாதாரம் பராமரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement