ரயில் டிக்கெட் விற்பனையில் 'தில்லாலங்கடி' 27 பேர் கைது; ரூ. 5 லட்சம் டிக்கெட் பறிமுதல்

கோவை:கோவை ரயில் நிலையத்தில், குறைந்த விலைக்கு டிக்கெட் வாங்கி, பயணிகளுக்கு அதிக விலைக்கு விற்ற 27 பேரை, ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் கைது செய்தனர்.

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதில், பல்வேறு குளறுபடிகள் நடக்கின்றன. விழாக்காலங்கள், வார இறுதி நாட்களில், ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதில் சிரமம் ஏற்படுகிறது. இந்நிலையில், இதை பயன்படுத்திக்கொண்டு டிக்கெட் ஏஜென்டுகள் சிலர், விற்பனையில் முறைகேட்டில் ஈடுபடுகின்றனர்.

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, ஒரு நபரின் ஆவணங்களை பயன்படுத்தி, ஆறு டிக்கெட் வரை முன்பதிவு செய்து கொள்ளலாம். ரயிலில் பயணிக்கும் போது, டிக்கெட் பரிசோதகர் ஒருவரின் ஆவணங்களை மட்டுமே பரிசோதித்து பார்க்கிறார்.

இதை பயன்படுத்தி ஏஜென்டுகள், டிக்கெட் முன்பதிவு செய்து அதிக விலைக்கு வேறு நபர்களுக்கு விற்பனை செய்கின்றனர். இதை கட்டுப்படுத்த, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி, கடந்த ஒரு ஆண்டில், கோவை ரயில் நிலையத்தில் அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்த, 27 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ. 5.55 லட்சம் மதிப்பிலான டிக்கெட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ரயில்வே பாதுகாப்பு படை இணையம் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் தளங்கள், கண்காணிக்கப்பட்டு வருகின்றன. சட்ட விரோதமாக முன்பதிவு செய்த, 252 'ஐடி'க்கள் முடக்கப்பட்டுள்ளன.

ரயில்வே பாதுகாப்பு படையில் உள்ள, சைபர் கிரைம் போலீசார் டிக்கெட் முன்பதிவு முறைகளை ஆராய்ந்து வருகின்றனர். டிக்கெட் கவுன்டர்களில் சி.சி.டி.வி., கேமரா பொருத்தி பிளாக்கில் டிக்கெட் விற்பனை செய்வதை தடுக்க, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement