பி.யு.சி., 2ம் ஆண்டு கணித தேர்வு 12,533 மாணவர்கள் 'ஆப்சென்ட்'

பெங்களூரு: பி.யு.சி., இரண்டாம் ஆண்டு கணித தேர்வில், மாநிலம் முழுதும் 12,533 மாணவர்கள் எழுதவில்லை.

கர்நாடகாவில் இம்மாதம் 1ம் தேதி துவங்கிய பி.யு.சி., இரண்டாம் ஆண்டு தேர்வுகள், 20ம் தேதி வரை 1,171 தேர்வு மையங்களில் நடக்கிறது. மொத்தம் 7,13,862 மாணவ - மாணவியர் தேர்வு எழுத பதிவு செய்திருந்தனர்.

இதில், 6,61,474 மாணவர்கள் புதிதாகவும், 34,071 மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுதுகின்றனர். 18,317 மாணவர்கள் தனியாராகவும் எழுதுகின்றனர். நேற்று முன்தினம் நடந்த கணித தேர்வை எழுத, 12,533 மாணவர்கள் வரவில்லை.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

இம்முறை தேர்வில் முறைகேடு நடக்காத வகையில், 'வெப் ஸ்டிரீமிங்' உட்பட பல கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதுமட்டுமின்றி, ஒழுங்காக படிக்காத மாணவர்கள், தேர்வில் தோல்வி அடைந்தாலும் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு கிடைக்கும். அப்போது எழுதிக் கொள்ளலாம் என்று அலட்சியமாக உள்ளனர்.

அதிகபட்சமாக பெங்களூரு தெற்கில் 1,510, ராய்ச்சூரில் 1,058, விஜயபுராவில் 1,010, ஹாசனில் 119, பெங்களூரு ரூரலில் 79, சாம்ராஜ் நகரில் 80 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதேவேளையில் தேர்வு எழுதிய மாணவர்கள் கூறுகையில், 'இம்முறை கணித தேர்வு கடினமாக இல்லை. சில கேள்விகளை தவிர மற்றவை சுலபமாக இருந்தது. இதில் ஒரு மதிப்பெண், இரண்டு மதிப்பெண் கேள்விகள் மிகவும் சிக்கலாக இருந்தது. அவற்றுக்கு பதிலளிக்க நீண்ட நேரமானது' என்றனர்.

Advertisement