சிட்டி கிரைம்

சாலை விபத்தில் இருவர் பலி



வடகோவையை சேர்ந்தவர் வினோத் குமார், 34. இவர் காந்திபுரம், ராம்நகர், படேல் சாலையில் கடந்த 3ம் தேதி நள்ளிரவு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக வேகமாக வந்த கார் ஒன்று, வினோத் குமார் மீது மோதியது. பலத்த காயமடைந்த வினோத் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

* திருச்சி ரோடு, ஒண்டிப்புதுார் அருகில் சிங்காநல்லுாரை சேர்ந்த முருகம்மாள், 60 நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, மது போதையில் ஆட்டோவை ஓட்டி வந்தவர் கட்டுப்பாடு இன்றி மூதாட்டி மேல் மோதினார். இதில் கீழே விழுந்த மூதாட்டியை, பொது மக்கள் மீட்டு இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். இரு சம்பவங்கள் குறித்தும், கிழக்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது



சேரன் மாநகர், என்.ஆர்.ஐ., கார்டன் பகுதியில் சிலர், பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக போலீசாருக்கு தகவல் கடைத்தது. பீளமேடு போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, சர்ச் ரோடு, என்.ஆர்.ஐ., கார்டன் பகுதியில், நான்கு பேர் பணம் வைத்து சீட்டு விளையாடியது கண்டுபிடிக்கப்பட்டது.

சூதாட்டத்தில் ஈடுபட்ட முகமது செரிப், 43, முகமது அப்பாஸ், 29, ராஜேஸ் சிங், 28 மற்றும் விக்கு குமார், 23 ஆகியோர் கைது செய்யப்பட்டனர். போலீசார் விசாரணையில், நான்கு பேரும் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும், என்.ஆர்.ஐ., கார்டன் பகுதியில் தங்கியிருந்து வேலைக்கு செல்வதும் தெரியவந்தது. போலீசார் நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர்.

சண்டையிட்டவர்கள் மீது வழக்கு



சிங்காநல்லுார் போலீசார் காமராஜர் ரோடு, பி.எஸ்.என்.எஸ்., அலுவலகம் அருகில் ரோந்து சென்றனர். அப்போது, அப்பகுதியில் பொது மக்களுக்கு இடையூறாக, மூவர் தகாத வார்த்தைகளால் திட்டி சண்டை போட்டுக்கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் சிங்காநல்லுார் ஸ்டேஷன் அழைத்து சென்றனர். மாரியப்பன், 59 அவரது மகன் கார்த்திக், 39 மற்றும் மசக்காளிபாளையத்தை சேர்ந்த செல்வகுமார், 28 ஆகிய அந்த மூவர் மீதும், வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement