பள்ளி சென்ற சிறுவன் மாயம்பல்லடம் போலீசார் விசாரணை

பல்லடம்:பல்லடம் அருகே, பள்ளி சென்ற சிறுவன் மாயமானது குறித்து, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேற்கு பல்லடம், அருள்ஜோதி நகரை சேர்ந்தவர் கரிச்சனகுமார் 47; வேளாண் பொருட்கள் விற்பனை செய்து வருகிறார். மனைவி சாரதாமணி, 43 மகன் ஜித்திஷ்குமார், 15 ஆகியோர் குடும்பத்துடன் வசிக்கின்றனர்.

ஜித்திஷ் குமார், கேத்தனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், பத்தாம் வகுப்பு படிக்கிறார். தினமும், பல்லடத்தில் இருந்து பஸ்சில் பள்ளி சென்று திரும்புவது வழக்கம். பிளஸ் 2 தேர்வு நடந்து வருவதால், மதிய உணவு இடைவேளைக்கு பின்பே பள்ளி செயல்படுகிறது.

இதனால், நேற்று முன்தினம் மதியம், 12.00 மணிக்கு பள்ளி சென்றுள்ளார். பள்ளி முடிந்து, மாலை, 6.00 மணிக்கு வீட்டுக்கு வருவது வழக்கம். நேற்று முன்தினம் இரவு, 7.00 மணி ஆகியும் வீடு திரும்பவில்லை. நண்பர்கள், அக்கம் பக்கத்தினர், உறவினர்களிடம் விசாரித்தும் தகவல் கிடைக்கவில்லை. இதையடுத்து, சாரதாமணி அளித்த புகாரின் பேரில், பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவனை தேடி வருகின்றனர்.

போலீசார் கூறுகையில், 'வழக்கமாக, கேத்தனுாரில் இருந்து பஸ் ஏறி பல்லடம் வந்து வீட்டுக்கு செல்லும் ஜித்திஷ்குமார், நேற்று முன்தினம், பல்லடம் வந்த பின், மீண்டும் திருப்பூர் செல்லும் பஸ்ஸில் ஏறிச் சென்றதாக கூறப்படுகிறது.

தனது தந்தை பைக் வாங்கி தருவதாக கூறியுள்ளார் என்றும், இதனால், அருள்புரம் செல்வதாக, நண்பனிடம் கூறிச்சென்றார். 'சிசிடிவி' காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்து வருகிறோம்,' என்றனர்.

Advertisement