வரியை எவ்வளவு குறைப்பீர்கள்! மேயர் தெளிவுபடுத்த அ.தி.மு.க., வலியுறுத்தல்

திருப்பூர்:''பல்வேறு போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றியாக வரி குறைப்பு தொடர்பான நடவடிக்கைக்கு வரவேற்கிறோம். ஆனால், எவ்வளவு குறைக்க உள்ளீர்கள் என்பதை மேயர் தெளிவுபடுத்த வேண்டும்,'' என்று மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி உள்ளிட்ட அ.தி.மு.க., வினர் தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் மாநகராட்சியில் விதிக்கப்பட்ட பல மடங்கு வரி உயர்வை கண்டித்து அ.தி.மு.க., - பா.ஜ., மற்றும் தி.மு.க., கூட்டணியிலுள்ள கம்யூ., கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியது.

அதன் உச்சகட்டமாக தொழில்துறையினருடன் கைகோர்த்து, ஒரு நாள் கடையடைப்பும் நடத்தப்பட்டது. இவ்வாறு அடுத்தடுத்து போராட்டங்களும் நடந்தது. இதன் காரணமாக, நேற்று முன்தினம் நடந்த மாநகராட்சி அவசர கூட்டத்தில், சொத்து வரி குறைக்க தமிழக அரசை கேட்டுக் கொள்ளும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இது குறித்து, மாநகராட்சியின் எதிர்க்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி கூறியதாவது:

கடந்த, 3ம் தேதி நடந்து முடிந்த மாமன்ற கூட்டத்தில் வரி உயர்வு குறைப்பு தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அது தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக மேயர் தெரிவித்தார். இதற்கு வரவேற்பு அளிக்கிறோம்.

ஆனால், கண் துடைப்புக்காக குறைப்பு நடவடிக்கையாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வரி எவ்வளவு குறைக்கப்படுகிறது என்பதை மேயர் தெளிவுபடுத்தவில்லை.

இதுதொடர்பான அவர் சரியாக விளக்கம் அளிக்கவில்லை. வரி உயர்வு தொடர்பாக ஒரு மாயை ஏற்படுத்துவதாக கூறுகிறார்.

பிற மாநகராட்சிகளை விட திருப்பூரில் தொழில் மற்றும் வணிக கட்டடங்கள் அதிகம் உள்ளன. இவற்றுக்கான வரியினங்கள் மிக அதிகம். இதனை கண்டிப்பாக குறைக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், ஆண்டுக்கு, ஆறு சதவீத வரி உயர்வு என்பதையும் குறைக்க வேண்டும்.

மேயரை பொறுத்த வரை, திருப்பூரில் மட்டும் தான் போராட்டம் நடத்தப்பட்டுள்ளதாக, மற்ற ஊர்களில் எந்த எதிர்ப்பும் இல்லை என்று கூறுகிறார். திருப்பூரை மற்ற மாநகராட்சிகளுடன் ஒப்பிட முடியாது. தொழில், வணிக வரி விதிப்பு அதிகம் உள்ளது.

வரும் கூட்டத்தில் வரி குறைப்பு குறித்து தெளிவுபடுத்த வேண்டும். இல்லையென்றால் மீண்டும் அடுத்த கட்ட போராட்டத்தை முன்னெடுக்க தயங்க மாட்டோம்.

இதனை பெயர்அளவில் செய்யாமல், மக்கள், வணிகர்களிடம் கருத்து கேட்பு முறையாக, எவ்வளவு குறைப்பு உள்ளிட்ட அனைத்தையும் மாநகராட்சிநிர்வாகம் தெளிவுபடுத்த வேண்டும்.

இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement