கட்டுப்பாட்டை இழந்த மினி பஸ் கடைக்குள் சீறிப் பாய்ந்தது

திருப்பூர்:திருப்பூர், பல்லடம் ரோட்டில் சென்ற மினி பஸ்சின் டிரைவருக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டதையடுத்து, கட்டுப்பாட்டை இழந்து கடைக்குள் சீறி பாய்ந்து விபத்து ஏற்பட்டது.

திருப்பூரை அடுத்த கணபதிபாளையத்திலிருந்து பயணிகளுடன் மத்திய பஸ் ஸ்டாண்டை நோக்கி மினி பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சை, ஜெயசந்திரன், 35 என்பவர் ஓட்டி சென்றார். தென்னம்பாளையம் அருகே பஸ் வந்த போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து முன்னாள் சென்று கொண்டிருந்த சரக்கு வாகனம், கார் உள்ளிட்ட வாகனங்கள் மீது மோதியது. தொடர்ந்து, ரோட்டோரம் இருந்த கடைக்குள் சீறி பாய்ந்து விபத்து ஏற்பட்டது.

தகவலறிந்து சென்ற திருப்பூர் தெற்கு போலீசார் விசாரித்தனர். அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

பஸ் டிரைவர் ஜெயசந்திரனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர். டிரைவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால் இந்த விபத்து நடந்தது தெரிந்தது. திருப்பூர் தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement