காதலியை கொன்று இளைஞர் தற்கொலை

பெலகாவி: காதலியின் கழுத்தை அறுத்துக் கொன்று இளைஞர், தானும் தற்கொலை செய்து கொண்டார்.

பெலகாவி, சஹாபுராவில் வசித்தவர் ஐஸ்வர்யா மகேஷ் லோஹார், 19. யள்ளூரு கிராமத்தைச் சேர்ந்தவர் பிரசாந்த் குன்டேகர், 29. இவர்கள் ஒன்றரை ஆண்டுகளாக காதலித்து வந்தனர். பிரசாந்த் குன்டேகர் பெயின்டராக பணியாற்றினார்.

இவர், தங்களுக்கு திருமணம் செய்து வைக்கும்படி, ஐஸ்வர்யாவின் தாயிடம் கேட்டார். ஆனால் அவரோ, “நன்றாக உழைத்து, வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள். திருமணத்தை பின்னர் பார்க்கலாம்,” என, புத்திமதி கூறினார்.

பிரசாந்த் குன்டேகரின் வீட்டிலும் திருமணத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இந்நிலையில், நேற்று மாலை 5:00 மணிக்கு, ஐஸ்வர்யாவும், பிரசாந்த் குன்டேகரும், சஹாபுராவின், நவிகல்லியில் உள்ள ஐஸ்வர்யாவின் சித்தி வீட்டுக்கு வந்தனர். திருமணத்தை பற்றிப் பேசினர்.

அப்போது ஐஸ்வர்யா, “வீட்டினர் கூறுவது சரிதான். இப்போதே திருமணம் வேண்டாம்,” என, கூறினார். கோபமடைந்த பிரசாந்த், தான் ஏற்கனவே கொண்டு வந்த விஷத்தை, ஐஸ்வர்யாவின் வாயில் ஊற்ற முயற்சித்தார்.

அவர் மறுத்ததால், பாக்கெட்டில் வைத்திருந்த கத்தியை எடுத்து ஐஸ்வர்யாவின் கழுத்தை அறுத்தார். பின் தன் கழுத்தை அறுத்துக் கொண்டார். இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

தகவலறிந்து அங்கு வந்த சஹாபுரா போலீசார், இருவரின் உடல்களையும் மீட்டனர். வழக்குப் பதிவு செய்து, விசாரணையை துவக்கினர்.

பெலகாவி நகர போலீஸ் கமிஷனர் யடா மார்ட்டின் கூறியதாவது:

ஐஸ்வர்யாவை தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி, பிரசாந்த் குன்டேகர் பிடிவாதம் பிடித்துள்ளார். ஐஸ்வர்யாவின் தாய் அறிவுரை கூறினார். இதே காரணத்தால், அவரது சித்தி வீட்டில், யாரும் இல்லாதபோது, காதலியை கொலை செய்து விட்டு, பிரசாந்த் தானும் தற்கொலை செய்து கொண்டார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement