தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக கூட்டு நடவடிக்கை குழு அமைக்க முடிவு; அமைச்சர் தங்கம் தென்னரசு

29

சென்னை: தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தி.மு.க., எந்த அரசியலும் செய்யவில்லை என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.


தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சிக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 58 கட்சிகளின் தலைவர்களும், நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். பா.ஜ., நா.த.க., புதிய தமிழகம், த.மா.கா., புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட கட்சிகள் இந்தக் கூட்டத்தை புறக்கணித்தன. இந்தக் கூட்டத்தில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சுமார் 4 மணிநேரம் நடைபெற்ற கூட்டத்திற்கு பிறகு, அதில் பங்கேற்றவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர்.


அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது: மத்திய அரசு தொகுதி மறுவரையறை செய்த பின், தமிழகத்திற்கு 5.28% பிரதிநிதித்துவம் கொடுத்தால், தமிழகத்திற்கு கூடுதலாக 10 லோக்சபா சீட்கள் கிடைக்கும். அதே நேரத்தில், உ.பி.,க்கு கூடுதலாக 63 சீட்கள் கிடைக்கும், பீஹாருக்கு 39, ம.பி.,க்கு 23, ராஜஸ்தானுக்கு 25 லோக்சபா சீட்கள் கிடைக்கும். தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் 1971ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 7.18 விகிதாசாரத்தை கடைபிடிக்க வேண்டும். அப்படி கடைபிடித்தால் தான், அவர்கள் தொகுதிகளின் எண்ணிக்கையை 848 உயர்த்தினாலும், நமக்கு 61 தொகுதிகள் கிடைக்கும். எனவே, இந்த நிலைப்பாட்டை சொல்லியிருக்கிறோம்.


தி.மு.க.,வுக்கு மாநில உரிமையை பற்றி பேசுவதற்கான முகாந்திரமே இல்லை. மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவதைப் போலத்தான் இந்த அரசாங்கம் உள்ளது. தி.மு.க.,வில் 39 எம்.பி.க்கள் இருக்கிறார்கள். அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தத்தை கொண்டு வர பிரதமரை வலியுறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பா.ம.க., தலைவர் அன்புமணி கூறியதாவது: தொகுதி மறுசீரமைப்பு குறித்து மத்திய அரசு இன்னும் அறிவிக்காத நிலையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்றது. உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் உள்பட தென்மாநிலங்களில் ஒரு தொகுதியும் குறைக்கப்படாது என்று கூறினார். அப்படியெனில் வட மாநிலங்களில் எத்தனை தொகுதிகள் அதிகரிக்கப்படும் என்பதெல்லாம் சொல்லவில்லை. அப்படியெனில் தொகுதி மறுசீரமைப்பு குறித்து மத்திய அரசு விவாதம் நடத்தி வருவது தெரிய வருகிறது.


பாதிக்கப்படும் தென்மாநிலங்கள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும். கோவிட் தொற்று பாதிப்பால் 2021ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. தொகுதி மறுசீரமைப்புக்கான கெடு முடிந்த பிறகு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அப்படி கணக்கெடுப்பு நடத்தினால் தமிழகத்தில் மிகப்பெரிய இழப்பு ஏற்படும்.


தோராயமாக இந்தியாவின் மக்கள் தொகை 142 கோடியாக இருந்தால், 753 தொகுதிகள் வரும். அதில் தென் மாநிலங்களுக்கு வெறும் 15 தொகுதிகளும், வடமாநிலங்களுக்கு 195 தொகுதிகளும் கிடைக்கும். குறிப்பாக, உத்தரபிரதேசத்தில் 48 தொகுதிகளும், பீஹாருக்கு 30 தொகுதிளும், மஹாராஷ்டிராவுக்கு 20 தொகுதிகளும் கிடைக்கும். ஆனால், தமிழகத்திற்கு வெறும் 2 தொகுதிகள் தான் கிடைக்கும். கேரளாவுக்கு ஒரு தொகுதி குறையும். 30 சதவீதம் தொகுதிகளை அதிகப்படுத்தினால், தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களுக்கும் 30 சதவீதம் அதிகரிக்கப்பட வேண்டும்.


இருமொழி, மும்மொழி கொள்கை தொடர்பாக மற்றுமொரு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று முதல்வருக்கு கோரிக்கை விடுத்தோம். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது குறித்து அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட கோரிக்கை வைத்துள்ளோம். முதல்வருக்கு சந்தேகம் இருந்தால், குழுவாக டில்லிக்கு சென்று, அமைச்சர்களை சந்தித்து, தமிழகத்திற்கு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அதிகாரம் இருக்கிறதா என்பதை தெளிவுபடுத்துவோம், இவ்வாறு கூறினார்.

தேமுதிக நிர்வாகிகள் கூறுகையில், ' 543 தொகுதிகள் என்பதை தொடர வேண்டும். பிரதிநிதித்துவம் கட்டாயம் காப்பாற்றப்பட வேண்டும்,' எனக் கூறினர்.



முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவர் கருணாஸ்; அரசியல் என்பதும், மத்திய ஆட்சி என்பதும் மக்களுக்கானது. மக்களின் உரிமைகளை பறிப்பதற்கும், அழிப்பதற்குமான ஒரு முன்னோட்டமாகத்தான் இந்த தொகுதி மறுஆய்வு செய்யும் கட்டமைப்பாக பார்க்கிறேன். சமூக நீதியும், தமிழகத்தின் உரிமையையும் பாதுகாக்க இணைந்திருப்போம் என்று அனைத்து கட்சியினரும் உறுதியளித்துள்ளனர்.



அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது: அனைத்து கட்சி கூட்டத்தில் 60க்கும் மேற்பட்ட தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். தீர்மானங்களில் சில திருத்தங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்தத் தீர்மானத்தை அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் ஒருமனதாக நிறைவேற்றியுள்ளனர். கூட்டு நடவடிக்கை குழுவை உருவாக்கி விடலாம் என்ற தீர்மானத்திற்கு ஆதரவு கொடுத்துள்ளனர். அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முதல்வர் முடிவு செய்வார். இதில், அரசியல் செய்யும் அவசியம் கிடையாது, என்றார்.

Advertisement