பாட்மின்டன்: ஆயுஷ் அபாரம் * உலக சாம்பியனுக்கு அதிர்ச்சி

ஆர்லியன்ஸ்: ஆர்லியன்ஸ் பாட்மின்டன் காலிறுதிக்கு இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி முன்னேறினார்.
பிரான்சில் சர்வதேச பாட்மின்டன் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் 19 இளம் வீரர் ஆயுஷ் ஷெட்டி (48 வது இடம்), முன்னாள் உலக சாம்பியன், உலகின் 'நம்பர்-12' ஆக உள்ள, சிங்கப்பூரின் லோ கியான் இயுவை எதிர்கொண்டார்.
முதல் செட்டை 21-17 என கைப்பற்றிய ஆயுஷ், அடுத்த செட்டை 21-9 என எளிதாக வசப்படுத்தினார். முடிவில் ஆயுஷ் 21-17, 21-9 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, உலக சாம்பியனுக்கு அதிர்ச்சி கொடுத்தார். இரண்டாவது சுற்றில் ஆயுஷ் ஷெட்டி, 21-17, 21-17 என ஹாங்காங்கின் குனவானை சாய்த்து, காலிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், மலேசியா வீரர் ஜீ ஜியா லீயை சந்தித்தார். இதில் ஸ்ரீகாந்த் 11-21, 17-21 என தோல்வியடைந்தார். இந்தியாவின் பிரனாய், 18-21, 9-21 என தைவானின் லின் சுனிடம் தோல்வியடைந்தார்.
கலப்பு இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் சதிஷ் குமார் கருணாகரன், வரியாத் ஜோடி, 18-21, 19-21 என பிரிட்டனின் ஈஸ்டன், டால்மன் ஜோடியிடம் வீழ்ந்தது.

Advertisement