பயங்கரவாதிகளால் இளைஞர்கள் 3 பேர் கொடூர கொலை; காஷ்மீரில் அதிர்ச்சி!

3


ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தின் பானி பகுதியில் பயங்கரவாதிகளால் 3 இளைஞர்கள் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் செயல்பாடு சமீபத்தில் அதிகரித்துள்ளது. இப்பகுதியில் நேற்று இளைஞர்கள் 3 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.


போலீசார் விசாரணையில், அவர்கள் யோகேஷ் சிங், தர்ஷன் சிங் மற்றும் வருண் சிங் ஆகிய 3 பேர் என்றும், பில்லாவர் நகரில் ஒரு திருமண விழாவில் கலந்து கொள்ளச் சென்றபோது வழி மாறி சென்றுள்ளனர் என்றும் தெரியவந்தது.



அப்போது அவர்கள் பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கி உள்ளனர். அவர்களை பயங்கரவாதிகள் கொடூரமான முறையில் கொலை செய்தது தெரியவந்தது. இது குறித்து மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தின் பானி பகுதியில் பயங்கரவாதிகளால் 3 இளைஞர்கள் கொடூரமாக கொல்லப்பட்டது மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த சம்பவம் மிகுந்த கவலை அளிக்கிறது.

அமைதியை சீர்குலைக்க மிக சதி நடந்திருப்பது தெரியவந்துள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இந்த விஷயம் குறித்து நாங்கள் விவாதித்துள்ளோம். இது குறித்து ஆய்வு செய்வதற்கு, மத்திய உள்துறை செயலாளர் ஜம்முவுக்குச் செல்கிறார்.



இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் பார்த்துக் கொள்ளப்படும். இதனால் அரசு மீது மக்களின் நம்பிக்கை வலுவாக இருக்கும் என்றும் நான் நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement