பூங்கா இடமாற்றத்திற்கு எதிர்ப்பு; நீலகிரியில் பொதுமக்கள் கடையடைப்பு போராட்டம்

நீலகிரி: நீலகிரி மாவட்டம் தேவாலா பகுதியில், மத்திய அரசு அறிவித்த பூங்காவை இடமாற்றம் செய்ததை கண்டித்து, பொதுமக்கள் கடையடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


இந்தியா சுற்றுலாத் துறையை சர்வதேச தரத்தில் தரம் உயர்த்தும் நோக்கத்துடன், பிரதமர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம், இந்தியாவில் 10 இடங்களில் புதிய பூங்காக்கள் உருவாக்க நிதி ஒதுக்கீடு செய்தார். அதில் தமிழகத்தில் மாமல்லபுரம் பகுதியில் 99.67 கோடி ரூபாய் செலவில் "நந்தவனம் பாரம்பரிய பூங்கா, மேம்பாடு செய்யவும், பந்தலூர் அருகே தேவாலா பொன்னூர் பகுதியில், 70.23 கோடி ரூபாய் செலவில் "தேவாலா மலர்கள் பூங்கா" மேம்பாட்டிற்கும் மொத்தமாக 170 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தார்.


இந்நிலையில், பொன்னூர் பகுதியில், பூங்கா அமைப்பதற்கு போதிய இடம் இல்லை என்பதுடன், வனத்துறைக்கு சொந்தமான இடம் என்பதை கூறி, இந்தத் திட்டத்தை, அய்யன்கொல்லி அருகே கள்ளிச்சால் பகுதியில், வருவாய் துறைக்கு சொந்தமான 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தில் அமைப்பதற்கான நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபட்டு உள்ளது. ஏற்கனவே பொன்னூர் பகுதியில் தோட்டக்கலை துறைக்கு சொந்தமான 200 ஏக்கர் நிலத்தை, கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்னர் மத்திய அரசு வழங்கியது.


ஆனால், தற்போது இந்த இடத்தை வனத்துறைக்கு சொந்தமானது என மாற்றி, பிரதமர் அறிவித்த திட்டத்தை செயல்படுத்தாமல், இடத்தை மாற்றிய செயலுக்கு நாடுகாணி மற்றும் பொன்னூர் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எம்.எல்.ஏ. ஜெயசீலன் தலைமையில் மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர். தீர்வு கிடைக்காத நிலையில் நேற்று நாடுகாணி முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டு, வியாபாரிகள் சங்கம் மற்றும் பொதுமக்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.


இதில் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்த பகுதியில், பூங்கா அமைக்க வேண்டும்., அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் பகுதியாகவும், பொது மக்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் வியாபாரிகளுக்கு வருவாய் கிடைக்கும் நிலையில், மக்கள் நடமாட்டமே இல்லாத பகுதிக்கு திட்டத்தை மாற்றியதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. பிரதமர் அறிவித்த பகுதியில் பூங்கா அமைக்காவிட்டால், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் சங்கங்கள் இணைந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தனர்.


இதற்கு எம்.எல்.ஏ. ஜெயசீலன், தே.மு.தி.க.வை சேர்ந்த விஜய பிரபாகரன் ஆகியோர் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் பங்கேற்றதுடன், மக்கள் பிரச்சினைக்காக நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்று ஆதரவு தெரிவிப்பதாகவும் கூறினார்கள்.

Advertisement