மன்னர் என நினைத்து செயல்படும் தர்மேந்திர பிரதான்: முதல்வர் ஸ்டாலின் காட்டம்!

76

சென்னை: 'தன்னை மன்னரென எண்ணிக் கொண்டு ஆணவத்துடன் பேசும் மத்திய கல்வித் துறை அமைச்சருக்கு நாவடக்கம் வேண்டும்' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.



கல்வி நிதி விவகாரத்தில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கும், தி.மு.க., எம்.பி.,க்களுக்கும் கடும் விவாதம் நடந்தது. மத்திய அமைச்சர் பேசியது, வேதனை அளித்ததாக தி.மு.க., எம்.பி., கனிமொழி புகார் கூறினார். இதையடுத்து, தான் பேசியது புண்படுத்தியிருந்தால் அதை வாபஸ் பெற்றுக் கொள்வதாக தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.



இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: தன்னை மன்னரென எண்ணிக் கொண்டு ஆணவத்துடன் பேசும் மத்திய கல்வித் துறை அமைச்சருக்கு நாவடக்கம் வேண்டும். தமிழகத்தின் நிதியைத் தராமல் ஏமாற்றும் நீங்கள், தமிழக எம்.பி.க்களைப் பார்த்து அநாகரிகமானவர்கள் என்பதா?



தமிழக மக்களை அவமானப்படுத்துகிறீர்கள். பிரதமர் மோடி இதனை ஏற்கிறாரா? NEP, மும்மொழிக் கொள்கையைத் தமிழக அரசு அனுப்பிய PM SHRI MoU முற்றிலுமாக நிராகரித்து விட்டது என எனக்குக் கடிதம் எழுதியது நீங்கள் தானே? பிரதான் அவர்களே, நாங்கள் மக்களின் எண்ணங்களுக்கு மட்டுமே மதிப்பளித்துச் செயல்படுகிறோம்! உங்களைப் போல நாக்பூரின் சொற்களுக்குக் கட்டுப்பட்டு அல்ல.


நாங்கள் உங்கள் திட்டத்தைச் செயல்படுத்த முன்வரவும் இல்லை, அப்படி முன்வராத என்னை யாரும் வற்புறுத்தவும் முடியாது. தமிழக மாணவர்களுக்குரிய நிதியை, எங்களிடம் இருந்து வசூல் செய்த வரியை விடுவிக்க முடியுமா முடியாதா என்பதற்கு மட்டும் பதில் கூறுங்கள். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement