ஐ.பி.எல்., விளம்பரங்களுக்கு கட்டுப்பாடு; சுகாதாரத்துறை உத்தரவு

4

புதுடில்லி; ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடரில் மது மற்றும் சிகரெட் போன்ற புகையிலைப் பொருட்களின் விளம்பரங்களை வெளியிடக் கூடாது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.


ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடர் வரும் 22ம் தேதி தொடங்குகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் கோல்கட்டா மற்றும் பெங்களூரூ அணிகள் மோதுகின்றன.


இந்த நிலையில், மத்திய சுகாதாரத்துறை சார்பில் ஐ.பி.எல்., தலைவர் அருண் சிங் துமாலுக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில், கிரிக்கெட் போட்டிகளின் போது, மது மற்றும் சிகரெட் போன்ற புகையிலைப் பொருட்களின் விளம்பரங்களை வெளியிடக் கூடாது என்று என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் அந்த கடிதத்தில்; தொற்று அல்லாத நோய் பாதிப்புகள் இந்தியாவில் அதிகரித்தே காணப்படுகின்றன. புற்றுநோய், நுரையீரல் மற்றும் இதயம் தொடர்பான நோய்கள், சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களால் ஆண்டுக்கு 70 சதவீத உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. புகையிலை பொருட்களும், மதுவும் தொற்றில்லா நோய்களை உருவாக்கும் முக்கிய காரணிகளாகும். உலகளவில் புகையிலைப் பொருட்களால் அதிக உயிரிழப்புகள் ஏற்படும் நாடுகளில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது. ஆண்டுக்கு 14 லட்சம் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.


எனவே, ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டியின்போது, நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்த வகையிலும் மது, புகையிலைப்பொருட்கள் தொடர்பான விளம்பரம் வெளியிடக்கூடாது.

ஐ.பி.எல்., தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளிலும், நடக்கும் வளாகங்களிலும் மது, புகையிலைப்பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது.

மது, புகையிலைப்பொருட்களுக்கு விளம்பரம் செய்யக்கூடாது என்று விளையாட்டு வீரர்கள், வர்ணனை செய்வோருக்கு அறிவுறுத்த வேண்டும்.

ஆரோக்கியம் மற்றும் சுகாதாரமான வாழ்க்கை முறையில் இளைஞர்களுக்கு முன்மாதிரியாக கிரிக்கெட் வீரர்கள் இருக்க வேண்டும், இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement