மாஸ்டர்ஸ் தடகளம்: தமிழகம் சாம்பியன்

பெங்களூரு: தேசிய மாஸ்டர்ஸ் தடகளத்தில் தமிழகம் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது.
தேசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் தொடரின் 45 வது சீசன் பெங்களூருவில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தில் நடந்தது.
இம்முறை தமிழகத்தில் இருந்து 440 பேர் பங்கேற்றனர். ஆண்களுக்கான 4X100 மீ., தொடர் ஓட்டத்தில் (45 வயது பிரிவு) மயில்வாகனன் (போதைப்பொருள் தடுப்பு புலனாய்வு பிரிவு எஸ்.பி.,), சுரேஷ், ராஜேஷ், மோகன் குமார் இடம் பெற்ற தமிழக அணி தங்கம் கைப்பற்றியது.
பெண்களுக்கான 4X100 மீ., தொடர் ஓட்டத்தில் (45 வயது பிரிவு) அருள்மொழி, சுகன்யா ரவிச்சந்திரன், ஸ்ரீலேகா, பிந்து கணேஷ் இடம் பெற்ற தமிழக அணி தங்கம் வென்றது.
35 வயதுக்கு மேற்பட்டோருக்கான பிரிவில் தமிழகத்தின் ஜேசு எஸ்தர் ராணி, 4X400 மீ., தொடர் ஓட்டம், 4X100 மீ., தொடர் ஓட்டத்தில் தங்கம் கைப்பற்றிய அணியில் இடம் பெற்றார். தவிர 'டிரிபிள் ஜம்ப்' போட்டியில் வெள்ளி, நீளம் தாண்டுதலில் வெண்கலம் கைப்பற்றினார்.
முடிவில், அதிக பதக்கங்கள் கைப்பற்றிய தமிழக ஆண்கள், பெண்கள் அணிகள் சாம்பியன்ஷிப் கைப்பற்றின. இத்தொடரில் 174 தங்கம், 105 வெள்ளி, 104 வெண்கலம் என மொத்தம் 383 பதக்கங்கள் கைப்பற்றிய தமிழக அணி, ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பை வென்றது.